சசிகலா குடும்பத்துக்கு பயங்கர ஆபத்து... தப்பிச்சுக்குங்க.. தம்பிதுரையிடம் எச்சரித்த பாஜக
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிட துடிக்கும் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடி தொடரும் என்பதால் அதிமுக தலைவர்கள் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என பாஜக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
சென்னை: அ.தி.மு.க அணிகள் இணைப்பு குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வரும் நேரத்தில் இந்த இணைப்பு நிகழ்வுகளில் தினகரன் மற்றும் சசிகலா தொடர்புடையவர்கள் எவருமே இருக்கக் கூடாது. அந்தக் குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்றுவதுதான் மிக முக்கிய வேலை என தம்பிதுரையிடம் பாஜக மேலிடம் நேரடியாக எச்சரித்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் வரும்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிப்பது கொங்கு மண்டலம்தான். கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில், கொங்கு மண்டலத்தின் பங்கு மிக முக்கியமானது.
அதே கொங்கு லாபியை வைத்துக் கொண்டுதான், சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது பாஜக. இதுநாள் வரையில் தினகரன் தொடர்புடைய அ.தி.மு.க நிர்வாகிகளுக்குக் கதவைத் திறக்காத பிரதமர் அலுவலகம், உ.பி தேர்தலுக்குப் பிறகு ரொம்பவே இறங்கியிருக்கிறது.

கொங்கு அமைச்சர்கள்
சேகர் ரெட்டியில் தொடங்கிய ஆட்டத்தை ஆர்.கே.நகரில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பா.ஜ.க. உண்மையில் வருமான வரித்துறை ரெய்டுகளால் அதிகம் கலவரத்தில் இருப்பது கொங்கு மண்டல அமைச்சர்கள்தானாம். ஒவ்வொரு அமைச்சர்களும் ஆயிரம் கோடிக்குக் குறையாமல் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் குறுநில மன்னர்களைப் போல் அவர்கள் வலம் வருகின்றனர். இந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

சேலம் இளங்கோவனுக்கு குறி
சேகர் ரெட்டி பிடிபட்டபோது அவர் தொடர்புடைய மணல் ஒப்பந்தங்கள் முழுக்க எடப்பாடி பழனிசாமியின் பொதுப்பணித்துறையின்கீழ் வந்தன. இந்த ரெய்டு எடப்பாடியை நோக்கி நீளும் என்ற அச்சமும் கொங்கு மண்டல அமைச்சர்கள் மத்தியில் நிலவி வந்தது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் சேலம் இளங்கோவனின் கூட்டுறவு அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. சுமார் 151 கோடி ரூபாய்க்கு போலியான கணக்குகளைத் தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த அதிரடியால் இன்னும் நொந்து போனார் எடப்பாடி பழனிசாமி.

வெள்ளைக் கொடி எடப்பாடி
இதன்பிறகு, வருமான வரித்துறையின் வேகம் குறைந்ததால், பிரதமர் அலுவலகத்துடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். ' நீங்கள் சொல்வதைக் கேட்கும் அரசாக இது இருக்கும்' என அவர் டெல்லிக்கு நம்பிக்கை அளித்தபோதும், பிரதமர் அலுவலக அதிகாரிகள் முதற்கொண்டு ஜெயலலிதா மீது பாசம் கொண்ட அவரது சமூகத்தினர் அனைவரும் சசிகலா மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

தப்பித்துக் கொள்ளுங்க...
இதனால் சசிகலா குடும்பத்தை வளர விடுவது சமூகத்துக்கே கேடு. நீங்கள் ஒதுங்கியிருந்தால் தப்பித்துக் கொள்வீர்கள். மாறாக, அந்தக் குடும்பத்தின் மீது பாசத்தைக் காட்டி, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முடிவைத் தேடிக் கொள்ள வேண்டாம். பன்னீர்செல்வத்துடன் இணக்கமாகச் செல்லுங்கள்' என நேருக்கு நேராக தம்பித்துரையிடம் எச்சரித்ததாம் பா.ஜ.க தலைமை.

இணைப்புக்கு தினகரன் எதிர்ப்பு
இதன்பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பன்னீர்செல்வத்தை விமர்சித்து எந்த இடத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ' நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்' என தினகரனிடம் வலியுறுத்தியபோதும், ' கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு, என் சித்தியை சிறைக்கு அனுப்பியருக்கு ஆதரவாகப் பேசாதீர்கள். துரோகிகளுக்கு எந்த இடமும் கிடையாது' எனக் கொதித்தார்.

தினகரன் மீது வழக்கு
இத்தகவல் டெல்லிக்குப் போன பின்னரே இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது புகார் பதிவானது. இந்த வழக்கில் இருந்து அவ்வளவு எளிதில் அவரால் வெளியில் வர முடியாது.

பொதுச்செயலராகும் ஓபிஎஸ்
தற்போதைய நிலையில் இனி பன்னீர்செல்வமும் எடப்பாடியும் இணைந்து செயல்படுவதில் எந்தத் தயக்கமும் இருக்காது. சசிகலாவிடம் இருந்து பொதுச் செயலாளர் பதவியைப் பறித்து, பன்னீர்செல்வம் கைககளில் கொடுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் முடிவுக்கு வரப் போகிறது என்கின்றன அ.தி.மு.க வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications