எஸ்எஸ்எல்சி படித்து விட்டு எட்டு பேரை ஏமாற்றி திருமணம் செய்ய மோசடி மன்னன்- மகளும் கைது
வசதியான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த புருஷோத்தமனின் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
கோவை: கணவரை இழந்த, விவாகரத்தான பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ய மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக புருசோத்தமனின் 20 வயது மகள் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் கீதாஞ்சலி. இவர் பல பெண்களை தனது தாயாரைப் போல இருப்பதாகக் கூறி புருசோத்தமனுக்கு மணம் முடிக்க காரணமாக இருந்துள்ளார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த காஜா உசேன், செரீப் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் குமுதவள்ளி என்பவர், போத்தனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில் கணவரை இழந்த தன்னை, மறுமணம் செய்து கொள்வதாக காந்திபுரத்தில் உள்ள திருமண உதவி மையம் மூலம் வெள்ளலூரைச் சேர்ந்த புருசோத்தமன் அணுகினார்.
850 பவுன் நகைகள் மோசடி
தொழில் அதிபர் என்றும் 27 லாரிகள், வீடுகள், நிலம் இருப்பதாகக் கூறி பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.
ஏலத்துக்கு வரும் தனது வீட்டை மீட்க ரூ.4 கோடி வேண்டும் என்று கேட்டார். வழக்கில் வெற்றிபெற்றால் ரூ.17 கோடி வரும் என நம்பவைத்து பணத்தையும், 850 பவுன் நகையையும் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து தனது சொத்துகளை மீட்டுக் கொடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.
பல பெண்கள் மோசடி
இந்த புகாரின் பேரில் மோசடி, சதித்திட்டம் தீட்டுதல், திருமண மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், இவர் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறித்ததும், பல மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் புருசோத்தமன் மீது இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்த போலீஸ்
திருமண தகவல் மையத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த புருசோத்தமன் கைது செய்யப்பட்டார். திருச்சியில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சபீதா, உஷாராணி, விமலா, இந்திராகாந்தி, சாந்தி, சித்ரா, குமுதவள்ளி, சுசிலா ஆகிய 8 பேரை புருஷோத்தமன் ஏமாற்றி திருமணம் செய்தது தெரிந்தது. பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது எப்படி என்று வாக்குமூலம் அளித்துள்ளார் புருஷோத்தமன்.
ஆதரவற்ற பெண்கள்
10ஆம் வகுப்பு வரை படித்துள்ள புருசோத்தமன், கணினி பயிற்சி பெற்றுள்ளார். ஆன்லைன் மூலம் நூல், பஞ்சு வியாபாரிகளை ஏமாற்றி பணம் பறித்ததாக அவர் மீது பல வழக்குகள் உள்ளன. வசதியான ஆதரவற்ற, கணவனை இழந்த, விவாகரத்து பெற்று மறுமணம் செய்யத் தயாராக உள்ள பெண்களை திருமண தகவல் மையத்தின் மூலம் அறிந்து கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக அணுகியுள்ளார்.
நூதன மோசடி
திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களில் அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர வசதியில்லாத ஆதரவற்ற பெண்களையும் அவர் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவர்கள் பெயரில் நிறுவனம் தொடங்கி அதில் தாம் செயல் அதிகாரியாக பணியாற்றுவதாகக் கூறி வெவ்வேறு நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பொருட்களை ஆர்டர் எடுப்பாராம்.
புருஷோத்தமன் மீது வழக்குகள்
திருமணம் செய்த பெண்களின் பெயரில் அந்த நிறுவனங்களுக்கு காசோலைகளைக் கொடுத்து சிக்கவைத்துவிட்டு, பொருட்களை விற்று பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிடுவது என நூதனமாக மோசடி செய்து வந்துள்ளார். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர் மாவட்டங்களிலும் பஞ்சாப், மஹாராஷ்டிரா, கொல்கத்தா, ஆந்திரா மாநிலங்களிலும் என சுமார் 25க்கும் அதிகமான வழக்குகள் அவர் மீது உள்ளன.
மோசடிக்கு உடந்தை
புருஷோத்தமனின் 20 வயது மகளும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வசதியான ஆதரவற்ற பெண்களை பார்த்து தனது அம்மாவைப் போல இருப்பதாக கூறி அனுதாபம் வரவழைப்பாராம் கீதாஞ்சலி. தந்தையின் ஏமாற்று வேலைக்கும், மோசடிக்கும் உடந்தையாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.