செம்பரம்பாக்கம் ஏரியில் 16 செ.மீ மழை- தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அட்வைஸ்!
செம்பரம்பாக்கம் பகுதியில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
சென்னை: சென்னையில் வர்தா புயலால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிகளை தீவிரமாக கண்காணிக்க நீர்வளத்துறை மாநில அரசுக்கு அறிவுரை அளித்துள்ளது.
வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய கனமழை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது. இன்று பகல் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வசித்து வந்த 8,000 க்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செம்பரம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியில் இருந்து பல ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
திடீரென அதிக அளவு தண்ணீர் திறந்து விட்டதால் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனிடையே சென்னையில் கனமழை பெய்தபோது, சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்டு முறையாக திறந்து விடப்பட்டிருந்தால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை தீவிரமாக கண்காணிக்க நீர்வளத்துறை மாநில அரசுக்கு அறிவுரை அளித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் பட்சத்தில் நீர் திறப்பு குறித்து முறையாக முன் அறிவிப்பு செய்து திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.