சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது- விமானங்கள் இயக்கம்!
வர்தா புயலால் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. விமானங்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.
சென்னை: வர்தா புயலால் ஒருநாள் நாள் முழுவதும் மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று அதிகாலை முதல் இயங்கத் தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.
வர்தா புயல் சென்னையை 7 மணிநேரமாக தொடர்ந்து தாக்கியது. இதனால் சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
இதையடுத்து விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னைக்கு வரும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இலங்கையில் இருந்து சென்னை வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையத்தில் 7 இடங்களில் கண்ணாடிகளும் 3 இடங்களில் மேற்கூரைகளும் காற்றில் பறந்தன. புயல் கரையைக் கடந்த நிலையில் விமான நிலையம் முழுவீச்சில் சீரமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.