சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட 4 மாணவர்கள் டிஸ்மிஸ்… 49 பேருக்கு ஜெயில்!

பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது, கண்டக்டரை தாக்குவது, காரணங்கள் இல்லாமல், சாலையில் செல்லும் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து நொறுக்குவது என சென்னை, மாணவர்களின் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி, ராயப்பேட்டை புதுக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்வதோடு வன்முறை சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனால் பேருந்துகள் சேதமடைவதோடு பொதுமக்களும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
நந்தனம் கல்லூரி
கடந்த சில நாட்களுக்கு முன்னர், நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களான பிரேம் குமார், பிரசாந்த், கோவிந்தராஜ், ஜெரின் ஆகிய 4 பேர் பஸ் கண்டக்டர் ஒருவரை தாக்கினர். இதில் மாணவி ஒருவரின் கண்ணில் கண்ணாடி குத்தி பாதிக்கப்பட்டது
4 பேர் டிஸ்மிஸ்
இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சைதாப்பேட்டை போலீசார், கல்லூரி நிர்வாகத்தினருக்கு பரிந்துரை செய்தனர். இதன்படி கல்லூரி முதல்வர் 4 மாணவர்களையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார்.
பச்சையப்பா கல்லூரி
இதேபோல், கீழ்ப்பாக்கம், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இந்த ஆண்டு கல்லூரி திறக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக 42 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 31 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சஸ்பெண்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் முன்னிலையில்
இது போன்ற மாணவர்கள் சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் தங்களது பெற்றோர்களை கட்டாயம் அழைத்து வரவேண்டும் என்றும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பெற்றோர்களை அழைத்து வந்து, அவர்கள் முன்னிலையில் ‘‘இனி வன்முறை சம்பவங்களில் ஈடுபட மாட்டேன்'' என எழுதி கொடுக்கும் மாணவர்கள் மட்டுமே மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரசிடென்சி கல்லூரி
இதேபோன்று வன்முறையில் ஈடுபட்ட குற்றத்துக்காக மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications