போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிரான வழக்கு நாளை ஒத்திவைப்பு
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
சென்னை: ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிரான வழக்கை நீதிபதிகள் நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 7-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வேலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தவணை முறையில் வழங்கி வருகிறோம்
அந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. இத்துடன் ஊழியர் நிலுவைத் தொகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அமர்வு விசாரணை நடத்திய நிலையில் நிலுவைத் தொகையினை தவணை முறையில் வழங்கி வருகிறோம் என்று தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்தார்.
பணிக்கு திரும்ப தயார்
முதற்கட்டமாக ரூ.750 கோடி வழங்க அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மீதி தொகை வங்கியில் கடன் வாங்கி நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் ஓய்வூதிய ஊழியர்களுக்கு நவம்பர் 30, 2017 வரை பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தொழிற்சங்கத்தினர் ஆஜராகி கூறுகையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் பணிக்கு திரும்ப தயாராக உள்ளோம். வேலைநிறுத்தம் என்பது கடைசி கட்ட போராட்டம்தான்.
6 மாதத்துக்கு முன்னர்
மெஜாரிட்டியான சங்கங்களை புறக்கணித்துவிட்டு தமிழக அரசு போலி ஒப்பந்தத்தை செய்துள்ளது. அரசின் போலி ஒப்பந்தத்தை கண்டித்துதான் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அப்போது நீதிபதி, 6 மாதத்துக்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்துவிட்டு தற்போது வேலைநிறுத்தம் செய்யலாமா?.
2.44 சதவீதத்தை ஏற்க தயார்
பஸ்களையே உடனே இயக்க வேண்டும். ஊதிய உயர்வில் 0.13 சதவீதம்தான் வேலைநிறுத்தத்துக்கு காரணமாக உள்ளது. 2.44 சதவீத ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க உத்தரவிட்டால், ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுமா?. 2.44 சதவீதம் ஊதிய உயர்வுக்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களின் கருத்தை கேட்டு சொல்வதாக தொழிற்சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை மாலை 6 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
ஒப்பந்தம் ரத்து
அப்போது தொழிற்சங்கத்தினர், 2.44 சதவீத இடைக்கால ஊதிய உயர்வாக ஏற்க ஒப்புக் கொள்கிறோம். ஜனவரி 4-ஆம் தேதி தமிழக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டால் இன்றே ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால் இன்று ஸ்டிரைக் வாபஸ் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்கள் ஜனவரி 4-ஆம் தேதி போடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் இந்த வழக்கானது நாளை ஒத்தி வைக்கப்பட்டது. 70 சதவீத தொழிலாளர்கள் நாளை பணிக்கு திரும்ப உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.