சிறையில் சசிகலாவுடன் ஆலோசனை விவகாரம்: முதல்வர், 4 அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சிறையில் உள்ள சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 அமைச்சர்கள் சந்தித்ததற்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை: பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியதற்கு எதிரான வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை உச்ச நீதிமன்றத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த நாளே மேற்கண்ட மூவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், எம்எல்ஏ-க்கள் மீண்டும் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் ஆசி வாங்க முதல்வரும், அமைச்சர்களும் விரும்பினர்.
சிறையில் ஆலோசனை
கடந்த மார்ச் மாதம் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சந்தித்தனர். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது.
மதுரை கிளையில் வழக்கு
இந்நிலையில் ஸ்ரீவில்லிப் புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி யின் மகன் டி.ஆணழகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவை கடந்த மார்ச் 28-ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் அவர் கூறுகையில், குற்றவாளியாக சிறையில் உள்ள சசிகலாவை அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டிக்கவில்லை.
தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
இது அவர்கள் ஏற்ற ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
முதல்வருக்கு நோட்டீஸ்
அந்த வழக்கானது இன்று நீதிபதி சுவாமிநாதன் உள்ளிட்டோர் அமர்வு முன் சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வரும், 4 அமைச்சர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.