திண்டுக்கல் ரீட்டாக்கள் ரெடியா.. கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கோயில் திருவிழாவில் ஆடல்-பாடல்கள் நடத்த தடை உள்ள நிலையில், மேடை கச்சேரிகளில், ஆடலை தவிர்த்து வெறும் பாடலோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில், திருச்சங்கோடு தாலுகா, தொண்டிகரடு கிராமத்தை சேர்ந்த டி.தாமோதரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எங்கள் ஊரிலுள்ள, ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 31ம் தேதி கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.
ஆனால், என் மனுவை போலீசார் பரிசீலிக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து கலாச்சார நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் எஸ்.திவாகர் ஆஜரானார். கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதித்தால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என போலீசார் கூறியதாக, அரசு தரப்பு தெரிவித்தது.
நீதிபதி சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீசாரிடம் உள்ள வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்படும் பயத்தின் காரணமாக, கலாச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூற முடியாது என்று கூறிய நீதிபதி, வரும் 31ம் தேதி கோவிலில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திக் கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கினார்.
அதேநேரம், நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள், ஆபாச வசனங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்கள், இளைஞர்களின் மனதை களங்கப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடாது. அரசியல் கட்சிகள், மதம், சாதி தொடர்பான எந்த ஒரு பாடல்களும், நடனமும் இடம் பெறக்கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.