சுவாதி கொலையான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒருவழியாக சிசிடிவி காமிரா பொருத்தம்!
கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலையான சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கணிகாணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கி நடந்துவருகிறது. சிசிடிவி கேமிராக்கள் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நாட்டையே அதிர்ச்சிக்குள் தள்ளியது அந்தக் கொடூர சம்பவம்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியைப் பிடிக்க அந்த ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள தனியார் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் முக்கிய பங்கு வகித்தன.
அதனால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாதது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து பயணிகள் அதிகம் கூடும் முக்கிய ரயில் நிலையங்களில் நிர்பயா திட்ட நிதியின் கீழ், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதுதொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
விசாரணையின்போது, தெற்கு ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் கே.கே.அஷ்ரப், "சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 82 ரயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. ரயில் நிலைய நடைமேடை, ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லும் மற்றும் வெளியே வரும் வழி என மொத்தம் 24 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவ்வாறு பொருத்தப்படும் கேமிராக்கள் 4 திசைகளிலும் சுழலும் மற்றும் துல்லியமாக படம் பிடிக்கும் அம்சங்களைக் கொண்டது." என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் இது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், " நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணியை பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து படிப்படியாக பிற ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.