ஹெல்மெட் அணியாத டூவீலர் ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் தரும் சென்னை போலீஸ்!
சென்னை: சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒருபகுதியாக ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டிச் செல்வோருக்கு இலவச ஹெல்மெட் அளிக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சாலை பாதுகாப்பு வாரத்தை சென்னை நகர டிராபிக் போலீசார் இந்த வாரம் கொண்டாடுகின்றனர். இதையொட்டி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
பள்ளி குழந்தைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலம், மெரினா பீச்சி்ல் மண்ணால் சிலை வடிப்பது போன்ற பல்வேறு நிகழ்ச்சியில் இந்த ஒரு வாரத்தில் நடைபெற உள்ளன.
டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்க காரணமாக அமைவது ஹெல்மெட் அணியாத பயணமே. எனவே ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில், டிராபிக் போலீசார் நேற்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
சாலையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்லும் டூவீலர் நபர்களை மடக்கிப்பிடித்து, அவர்களுக்கு இலவசமாகவே ஹெல்மெட் கொடுக்க உள்ளனர் சென்னை போலீசார். வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான இன்று மட்டும், 2000 ஹெல்மெட்டுகளை இலவசமாக வினியோகம் செய்ய டிராபிக் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.