வெள்ள நிவாரணம்: ஜெ. தொகுதியில் சென்னை அ. தி.மு.க மேயரை அடித்து விரட்டிய அ.தி.மு.க. மா.செ. வெற்றிவேல்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை, ஆர்.கே.நகரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யப் போன சென்னை மேயர் சைதை துரைசாமியும் அவரது உதவியாளர்களும் அதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர்கள் வேலுமணி, கோகுல இந்திரா மற்றும் வளர்மதி ஆகியோர் தியாகராய நகர், ஜின்.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை சந்திப்பு, புரசைவாக்கம், எழும்பூர், ஐஸ் ஹவுஸ், சிந்தாதரிப்பேட்டை உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கோபாலபுரம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அரிசி,வேட்டி,சேலை உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினர். மழை நீர் தேங்காமல் தடுக்கவும், மழை நீரால் தொற்று
நோய்கள் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.
தமிழக முதல்வரின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மேற்குப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும். இங்குள்ள நேதாஜிநகர், குமரன்நகர், துர்காதேவி நகர், மூப்பனார் நகர், மீனாம்பாள் நகர், ஜெ.ஜெ.நகர், எழில்நகர், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது.
கடந்த 8ம் தேதி முதல் நேற்று வரையில் ஐந்து நாட்களாக சென்னையை புரட்டிப் போட்ட வடகிழக்கு பருவமழைக்கு ஆர்.கே.நகரின் மேற்குப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான வெற்றிவேல் ரயில்வே தடுப்புச் சுவரை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது செயலினால் வெள்ளநீர் முழுவதும் ரயில் தண்டவாளத்தை முழ்கடித்தது. ரயில் போக்குவரத்து இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
முதல்வர் தொகுதியில் பாதிப்பு
சென்னையின் பல பகுதிகளை இரண்டு நாட்களாக சுற்றிப்பார்த்து வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வரும் அமைச்சர்கள் குழு நேற்று சாவகாசதாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகர் தொகுதியை சுற்றிப் பார்த்து ஆறுதல் கூறச் சென்றது.
வெற்றிவேல் வரவேற்பு
அப்போது அமைச்சர்களை வரவேற்க வட சென்னை வடக்கு மாவட்ட செயலரும், ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெற்றிவேல், தன் ஆதரவாளர்களுடன் நின்றிருந்தார். மேயர் சைதை துரைசாமியை கண்டதும் வெற்றிவேல், 'இவருக்கு இந்த தொகுதியில் என்ன வேலை' என்று ஆத்திரத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதற்கு, மேயரின் பாதுகாப்பு அதிகாரி யேசுராஜ், 'முதல்வர் உத்தரவுப்படி, மேயர் இங்கு ஆய்வுக்கு வந்திருக்கிறார் என்று கூறினார்.
மேயருக்கு காயம்
வாக்குவாதம், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.யேசுராஜ் மற்றும் மேயரின் தனி உதவியாளர் பழனிச்சாமி ஆகியோரை வெற்றிவேல் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில், இருவரும் காயமடைந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற துரைசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சிலர் மீதும் அடி விழுந்தது.
எஸ்கேப் ஆன அமைச்சர்கள்
இதனையடுத்து இருவரையும் ஒரு வழியாக சமாதானப்படுத்திய போலீசார், மேயரையும், மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூரையும் காரில் ஏற்றி விட்டு பின்னர் ஸ்பாட்டில் இருந்த அமைச்சர் வளர்மதியைத் தேட ஆரம்பித்தனர். அவரோ வந்த சுவடு தெரியாமல் எஸ்கேப் ஆனது பின்னர் தெரிந்தது. இந்த அடிதடியில் நாம் ஏன் சிக்க வேண்டும் என்று நினைத்து வளர்மதிக்கு முன்னதாக, அமைச்சர் கோகுல இந்திராவும் காரில் பறந்து விட்டாராம். வெள்ளநிவாரணம் கடைசியில் ரணகள நிவாரணமானதுதான் மிச்சம் என்கின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள்.