வெள்ளத்தில் மூழ்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கும் ரிவர் வியூ காலனி - 500 பேர் மீட்பு
சென்னை: சென்னை அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மணப்பாக்கத்தில் 40 ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கும் ரிவர் வியூ காலனி நீரில் மூழ்கியது. அங்கிருந்து 500 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆலந்தூர் மாநகராட்சி மண்டலம் 157 ஆவது வார்டு மணப்பாக்கம் அடையாறு ஆற்றை ஒட்டி ரிவர் வியூ காலனி உள்ளது. அங்கு 40 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பங்களாக்கள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
தண்ணீரில் மூழ்கிய ரிவர் வியூ காலனி:
இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அடையாறு நிரம்பி ரிவர் வியூ காலனிக்குள் தண்ணீர் புகுந்தது. இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வரத்து அதிகரித்து நேற்று அதிகாலை ஆறு அடி உயர வெள்ளநீரில் பங்களாக்கள் மற்றும் குடியிருப்புகள் முழ்கின.
500 பேர் மீட்பு:
அரக்கோணம் பாட்டாலியன் 4ஐ சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 வீரர்கள் குழு கமாண்டர் பிஸ்வால் தலைமையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணியில் இருந்து மாலை வரை 500 பேர் பேரிடர் மீட்புப் படகு மற்றும் மீனவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
மூழ்கிய இருசக்கர வாகனங்கள்:
இந்த வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மூழ்கின. மீட்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினர் உறவினர் வீடுகள் மற்றும் லாட்ஜ்களில் தஞ்சமடைந்தனர்.
10 ஆண்டுகளுக்குப் பிறகும்:
2005 இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது இதே போல் இந்த குடியிருப்புகள் மூழ்கின. 10 ஆண்டுகளில் வெள்ளத் தடுப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.