வடசென்னை வழியாக கேட்பாஸ் போட்டு... அலுவலகம் செல்லும் நேரத்தில் இன்றும் மழையாம்- தமிழ்நாடு வெதர்மேன்
வட பகுதியில் மேக கூட்டங்கள் வலுபெறுவதால் வடசென்னை வழியாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வடசென்னை வழியாக சென்னைக்குள் மழை நுழையும் என்றும் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அடிச்சா ஒரே அடி என்பதைபோல் வெளுத்து வாங்குகிறது. கடந்த 2 நாள்களாக ஓய்ந்திருந்த மழை நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காலை வேளையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டத்தில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் விட்டுவிட்டு மழை பெய்யும்.
அதுவும் சரியாக அலுவலகத்துக்கு செல்லும் நேரத்தில் மழை பெய்யும். சென்னையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்தே என்ன நடக்கும் என்பது தெரியவரும். அதனால் இன்று மாலை வரை காத்திருப்போம். அதுவரை கனமழைக்கு வாய்ப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதில் எண்ணூரில் 107 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வட மற்றும் மத்திய சென்னை அதிக மழையை பெற்றுள்ளது.
சென்னை சிட்டி, மாதவரம், சோழவரம் - தலா 66 மி.மீ மழையும், கோலப்பாக்கம்- 42, கிண்டி- 37, செங்குன்றம்- 35, மீனம்பாக்கம்- 30, தரமணி- 27, திருவாலங்காடு- 26, பூந்தமல்லி- 15, கேளம்பாக்கம், சோளிங்கநல்லூர்- தலா 10 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications