சாத் பூஜை: மெரீனாவில் குவிந்த பீகாரிகள், வட இந்தியர்கள்!
சென்னை: வருடாந்திர சாத் பூஜையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், வட இந்தியப் பெண்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவி்ந்து சூரிய பகவானை வழிபட்டு வேண்டிக் கொண்டனர்.
சென்னையில் வசித்து வரும் பீகாரிகள், ஜார்க்கண்ட், உ.பி. உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்ததால் மெரீனா ஒரு குட்டி வட இந்தியாவாக காட்சி தந்தது.
முன்பெல்லாம் சாத் பூஜா சென்னையில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் தற்போது அதிக அளவில் பீகார், உ.பி,. ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் குடியேறி வருவதால் இந்த ஆண்டு சாத் பூஜையின்போது பெருமளவில் கூட்டம் கூடியிருந்தது.
சூரிய வணக்கம்
சாத் பூஜை என்பது பீகார், உ.பி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லநடத்தப்படும் இந்து மத விழா இது.
நான்கு நாள் விழா
நான்கு நாட்களுக்கு இது நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.
சென்னையிலும் பிரபலமாகிறது
வட இந்திய பண்டிகையான இது தற்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது. காரணம், இங்கு அதிக அளவில் பெருகி வரும் பீகாரிகள், உ.பி காரர்கள் எண்ணிக்கைதான்.
மெரீனாவில் கூட்டம்
சாத் பூஜையின் கடைசி நாளான நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பெருமளவில் பீகாரிகள், உ.பி, ஜார்க்கண்ட் மாநிலத்தவர் திரண்டு பூஜை நடத்தினர்.
பெண்களின் பண்டிகை
இது பெண்களின் பண்டிகை ஆகும். இரண்டு இரவும், ஒரு பகலும் அவர்கள் தங்களது குடும்பத்தினரின் நலனுக்காக விரதம் இருந்து நான்காவது நாளில் குடும்பத்தினருடன் கூடி சூரிய பகவானுக்கு நன்றி கூறி வழிபாடு நடத்துவர்.
நீரில் மூழ்கி வழிபாடு
நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி பின்னர் வழிபாடு நடத்துவர் பெண்கள். மேலும், சூரிய பகவானுக்கு இளநீர், பழங்கள், இனிப்புகளை படையல் இடுவர்.
சென்னையில் பீகாரிகள்
சென்னையில் சமீப காலமாக பீகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்ன தொழில்தான் என்றில்லாமல் பல தொழில்களிலும் அவர்கள் அதிகரித்துள்ளனர்.
கட்டுமானம் முதல் ஹோட்டல் சப்ளையர் வரை
கட்டுமானத் தொழில் முதல் ஹோட்டல் சப்ளையர் வரை பீகாரிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது. இங்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் பல்கிப் பெருகி வருகின்றனர்.
தமிழக தொழிலாளர்கள் குறைந்ததால்
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் வந்ததால் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து போய் விட்டது. இந்த இடத்தை தற்போது பீகாரிகள் தான் நிரப்பி வருகின்றனர்.
வட கிழக்கு இந்தியர்கள் பெருக்கம்
அதேபோல வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெருகி வருகின்றனர். சமையல் வேலை, துப்புறவு வேலை உள்ளிட்டவற்றில் இவர்களது பெருக்கம் அதிகரித்துள்ளது. நன்றாக தமிழும் பேசுகின்றனர்.
இதன் காரணமாகவும் சாத் பூஜை சென்னையிலும் பிரபலமாகி வருகிறது.