ஹெலிகாப்டரில் பிரச்சாரத்திற்கு வரும் ஜெயலலிதாவுக்கு எங்களின் சாதனைகள் தெரியுமா? ப.சிதம்பரம்
மானாமதுரை: மத்தியில் ஆட்சியமைக்கப்போவது அதிமுகவோ, திமுகவோ அல்ல பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சித்தான் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஹெலிகாப்டரில் பிரச்சாரத்திற்கு வரும் ஜெயலலிதாவிற்கு மத்திய அரசின் சாதனைகள் எப்படித் தெரியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்..
சிவகங்கை லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது தந்தையும் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மானாமதுரை சுற்றுவட்டார கிராமங்களில் இன்று வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் அவர் பேசியதாவது:
இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இதில் 83 கோடி பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். அமெரிக்க ஜனாதிபதிக்கு வயது 46, இங்கிலாந்து பிரதமர் பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 42, இத்தாலி பிரதமருக்கு 37, மெக்சிகோ ஜனாதிபதிக்கு வயது 41. 40 வயதுக்கு உட்பட்டோர் அவரவர் நாட்டில் சிறப்பு ஆட்சி செய்யும்போது, நமது நாட்டில் மட்டும் ஏன் வயது முதிர்ந்தவர்களை ஆட்சி அதிகாரத்துக்கு அனுப்ப வேண்டும். எனவே இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என நான் கூறினேன்.
ஊருக்கு உபதேசம் செய்தால் மட்டும் போதாது என்ற நோக்கத்தில் நானும் வழிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் லோக்சபா தொகுதி வேட்பாளர்களாக இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அதனை ஏற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல், கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை லோக்சப தொகுதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்காவில் படித்தவர்
கார்த்தி சிதம்பரம் இந்தியாவில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தல்களில் உங்கள் பேராதரவை தந்தீர்கள். அதன் விளைவாக நான் நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராக பணியாற்றினேன். இந்த பெருமையெல்லாம் எனக்கு அல்ல, தமிழனுக்கு மட்டுமே சாரும்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
காங்கிரஸ் கட்சி தன்னை புதுப்பித்துக்கொண்டு வருகிறது. அதனாலேயே அகில இந்திய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டு காலத்தில் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலைக்காக ரூ.80 கோடி செலவில் தார்சாலை அமைத்துள்ளோம். ஆனால் இதற்கு தமிழக அரசு பல தடைகளை விதித்து முட்டுக்கட்டைபோட்டு, அந்த திட்டத்தையே முடக்க முனைந்தது. அதனையும் மீறி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற அத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளேன்.
ஏழைகளின் கட்சி
காங்கிரஸ் கட்சியினுடைய செங்கோல், ஏழை-எளிய மக்களுக்காகவே வளையும். பா.ஜனதா கட்சி பணக்காரர்களுக்காகவும், நில பிரமுகர்களுக்காகவும், மொத்த வியாபாரிகளுக்காகவும் செயல்படும் ஒரு அரசியல் அமைப்பு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
100 நாள் வேலை திட்டம்
100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தமிழக மக்களின் பஞ்சம், பட்டினியை அகற்றி வந்தோம். இதற்காக தமிழக அரசிற்கு தினக்கூலியாக ரூ.148-ஐ நிர்ணயித்துள்ளோம். ஆனால் அவர்கள் உங்களுக்கு அதனை முழுமையாக தரவில்லை. ரூ.70, ரூ.80 என கூலிகளை கொடுப்பதை அறிகிறோம். இதற்கு காரணம் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவையே காரணம்.
ஹெலிகாப்டரில் பிரச்சாரம்
கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனை என்ன என்று தமிழக முதல்வர் கேட்டுள்ளார். ஆகாய வழியாக வந்தவருக்கு எங்களது திட்டங்கள் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அவர் தரைவழியில் வந்து இருந்தால் எங்களது நலத்திட்டங்கள் தெரிய வந்திருக்கும் என்றார்.
வேட்பாளர் தெரியாத விஜயாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பெயரே தெரியவில்லை. பிரச்சாரத்திற்கு வந்து வேட்பாளரை தேடினார். போட்டி பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும்தான் என்றும் அவர் கூறினார்.
புதிய அரசுக்கு சிக்கல்
இதனிடையே மற்றொரு கூட்டத்தில் பேசிய சிதம்பரம், பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்தித்த பிரச்சனைகளை புதிய அரசும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ப.சிதம்பரம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், நேரடி வரிக்கொள்கை, பொருட்கள், சேவை வரி போன்ற முக்கிய விவகாரங்களில் மத்திய அரசு முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
நாடாளுமன்றம் முடங்கும்
பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க இயலாமல் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டது. இதற்கு மாறாக முடிவெடுக்க முடியாமல் அரசு திணறுவதாக புகார் கூறப்பட்டது. இதேபோன்ற நிலையை புதிய அரசு சந்திக்க வாய்ப்புள்ளது என்றார் பா.சிதம்பரம்
ஒரே கல்லுல 2 மாங்கா
கார்த்தி சிதம்பரத்திற்கு வாக்களித்து ஜெயிக்க வைப்பதன் மூலம் உங்களுக்கு ஒரே கல்லில் 2 மாங்கா கிடைக்கும் என்று கூறிய சிதம்பரம் இருவருமெ சேர்ந்து தொகுதிக்கு உழைப்போம் என்றும் கூறினார்.