கொங்கு தமிழில் கொஞ்சிப் பேசும் சீன மங்கை ”இலக்கியா”
கோவை: தமிழில் படிப்பது பாவம் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் தமிழ்தான் என் உயிர் மூச்சு என்று பாரதியார் பல்கலைகழகத்தில் கல்வி கற்றுள்ளார் இந்த சீனப் பெண்.
குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் படிக்கவைப்பது அவமானம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இன்று தமிழகத்தில் பலர்.
ஆனால் சீனதேசத்து இளமங்கை 25 வயது சன்குயிங் தமிழ் எனது உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டது என்று மனம் திறந்து கூறுகிறார்.
சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமால் தனது உள்ளத்து ஆசைகளை நனவாக்க கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றார்.
தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பெயரை "இலக்கியா" என்று மாற்றிக்கொண்டார். இப்போது அவர் பேசும் இனிமையான தமிழை காது குளிர கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
தமிழை விரும்பக்காரணம் என்ன என்று கேட்ட போது‘தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதை நான் சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் படித்த போது உணர்ந்தேன்.
அதனால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் அறிந்து வியந்தேன். தமிழின் சுவையை ஒட்டுமொத்தமாக அனுபவிப்பதற்காகவே கோவை வந்தேன்.
தமிழ் மக்களின் நீண்ட செழுமையான பண்பாட்டின் மீது ஆவல் கொண்டு நான் சீனாவின் தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்பு மேற்கொண்டேன்' என்றார்.
தமிழ் மீது தீராத காதல் கொண்ட இலக்கியா சீனாவில் உள்ள வானொலி நிலையத்தில் தமிழ் பிரிவில் பணியாற்றி வருகிறார். தமிழில் கரைகண்ட இலக்கியாவின் பெற்றோருக்கு சிறிதும் தமிழ் தெரியாது என்பதுதான் உண்மை.
நான் இந்தியாவுக்கு சென்று படிக்க வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்தபோது எனது பெற்றோர் இந்தியாவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்று என்னை பயமுறுத்தினார்கள். ஆனால் இங்கு வந்த பின்னர் தான் அதில் உண்மை இல்லை என்பதை புரிந்து கொண்டேன். தமிழ் மிகவும் இனிமையானது.
அதிலும் கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழாக உள்ளது. கொங்கு மக்கள் பேசும் அழகே தனி. தமிழக முன்னாள் முதல் அமைச்சர் சி.என்.அண்ணாதுரை, நா.பார்த்த சாரதி, ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புகளும், பாரதியாரின் கவிதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் சீனத்து குயில் இலக்கியா. திருக்குறள் என் உள்ளத்தில் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார் அவர்.