என்எல்சி தொழிலாளரை கொன்ற சிஐஎஸ்எப் வீரர் கைது- ஆபாசமாக இந்தியில் திட்டியதால் மோதல்
நெய்வேலி: என்எல்சி ஊழியரைப் பார்த்து மிகக் கேவலமாக, ஆபாசமாக திட்டியதால் கோபமடைந்த என்எல்சி ஊழியர் ராஜா என்கிற ராஜ்குமார், என்எல்சியின் மத்திய தொழிலக படை வீரர் நோமனின் சட்டையைப் பிடித்துச் சண்டைக்குப் போயுள்ளார். இதையடுத்து அந்த வெறி பிடித்த வீரர், சரமாரியாக 3 முறை தலையிலேயே சுட்டுக் கொன்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
வெறித்தனமாக நடந்து கொண்டு கொடூரமாக தமிழக தொழிலாளரைச் சுட்டுக் கொன்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய படை வீரரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
நோமன் கைது செய்யப்பட்டுள்ளதை போலீஸார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து என்எல்சி ஊழியர்கள் கூறுகையில், முதலாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக இருந்தவர் ராஜ்குமார். இவர் 2வது சுரங்கத்தில் வேலை பார்க்கும் தனது நண்பரிடம் பணம் கடன் வாங்குவதற்காக போயுள்ளார்.
அப்போது சுரங்க வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார் நோமன். அவர் ராஜ்குமாரை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார். அத்தோடு நில்லாமல், தாயைக் குறித்துத் திட்டும் கெட்ட வார்த்தையையும், திருடன் என்று பொருள் படும் சோர் என்றும் அசிங்கமாக இந்தியில் திட்டியுள்ளார்.
ராஜ்குமாருக்கு இந்தி தெரியும் என்பதால் அவர் வெகுண்டு விட்டார். உடனே நோமனின் சட்டையைப் பிடித்து அடிக்கப் போய் விட்டார். இதையடுத்து வெறி பிடித்தவர் போல நோமன் தனது கையில் இருந்த துப்பாக்கியால் ராஜ்குமாரின் தலையிலேயே சரமாரியாக 3 ரவுண்டு சுட்டு விட்டார்.
இதில் மூளை சிதறி, தலை சிதறி மிகப் பரிதாபமாய் உயிரிழந்தார் ராஜ்குமார். இந்த சம்பவம் என்எல்சி ஊழியர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்எல்சி வளாகம் தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது.
தற்போது நோமன் மீது போலீஸார் என்ன பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.