சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம்: அதிமுகவுடன் தள்ளுமுள்ளு - திமுக, தேமுதிக, காங். வெளிநடப்பு
சென்னை: சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தில் திமுக, அதிமுகவினருக்கு இடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், திமுக, காங்கிரஸ், தேமுதிக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு கூடியது.
அப்போது, தி.மு.க. ஆட்சியில் இடிக்கப்பட்ட கலைவாணர் அரங்கத்தை ஜெயலலிதா நவீனமுறையில் 3 அடுக்குகளுடன் கட்டி முடித்து திறந்து வைத்தது, மாநகராட்சி பள்ளிகளுக்கு ஜெயலலிதா 48 சலுகைகள் அறிவித்தது உள்ளிட்டவற்றை மேயர் பாராட்டிப் பேசினார்.
மேலும், தூய்மையான வகுப்பறைகள், போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் என கல்வித் துறையில் யாரும் செய்யாத சாதனையாக பல்வேறு வசதிகளை ஜெயலலிதா ஏற்படுத்தி கொடுத்து இருப்பதாகவும் மேயர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மேயர் அருகில் சென்று ‘‘இந்த 48 சலுகைகள் சென்னை பகுதிக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த புறநகர்ப் பகுதிக்கு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். பின்னர், இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் அவர் கூறி, வெளியே சென்றார்.
அவரைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சந்திரபோஸ் எழுந்து கல்வி-சுகாதாரத்தில் புறநகர்ப்பகுதி புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அவருடன் மற்ற தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பியதால் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது.
இதனால், அவர்களை வெளிநடப்பு செய்ய வேண்டும் என்றால் வெளியே செல்லுமாறு மேயர் அறிவுறுத்தினர். அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து திமுகவினரை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். ஆனால், காவலர்கள் வெளியேற்றுவதற்கு முன்னதாக தாங்களாக திமுகவினர் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து தேமுதிக கவுன்சிலர் ஆறுமுகமும் வெளிநடப்பு செய்தார்.