கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் வகுப்புகள் தொடக்கம்..அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மேல்நிலைப் பள்ளியில் படித்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகள் ஸ்ரீமதி. 17 வயதான இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

கலவரம்
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் உறுதியான நடவடிக்கை எடுக்காததால், கடந்த 17-ந் தேதி போராட்டம் கலவரமாக மாறியது. யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தாக்கி விட்டு பள்ளிக்கூட வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பஸ்களுக்கு தீ வைப்பு
ஒருசிலர் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை அடித்து நொறுக்கினர். இதில் மொத்தம் அந்த பள்ளியில் நின்ற 17 பஸ்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதுமட்டுமின்றி போராட்டக்காரர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள மேஜை, நாற்காலிகள், கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இவ்வாறாக போராட்டக்காரர்களின் கொடிய தாக்குதலால் அந்த பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இது குறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடந்து வருகிறது.

அமைச்சர் பேட்டி
இவ்வாறாக பள்ளிக்கூடம் முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாலும், அங்குள்ள ஆசிரியர்கள் சிலர் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பதாலும் அந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் நடத்த முடியாத சூல்நிலை ஏற்பட்டது. இந்த பெரிய கலவரத்தால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ-மாணவிகளும் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், முதல்கட்டமாக அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video

அடுத்த வாரம் முதல்..
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ''மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு முதல்கட்டமாக சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்காக வேறு இடங்கள் இறுதி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி ஆட்சியாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்களுடன் பேசியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications