இயற்கையை நோக்கி திரும்புகிறது இளைய சமுதாயம்.. சென்னையில் மண் பானை குக்கர், தண்ணீர் பானை விற்பனை ஜோர்
மண் பானைகளால் செய்யப்பட்ட நவீன ரக குக்கர்கள், பான்கள், வாட்டர் பியூரிபையர் உள்ளிட்ட பொருள்கள் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை: மண் பானைகளால் செய்யப்பட்ட உணவுகளுக்கு தனி ருசி இருக்கும். ஆனால் தற்போதைய இயந்திர உலகத்துக்கு ஏற்ப அந்த மண் பானைகளிலும் சில புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன.
அந்த காலங்களில் நமது மூதாதையர்கள் களிமண்ணினால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் செய்த உணவு பொருள்கள் கூடுதல் ருசியுடனும், பிரிட்ஜ் இல்லாமல் நீண்ட நாள்களுக்கு கெடாமலும் இருந்தது.
மேலும் அவர்களுக்கு எவ்வித நோய் பாதிப்பும் இன்றி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தனர். இன்றும் பல் உள்ள, முடி நரைக்காத பாட்டிகளை நம்மால் காணமுடிகிறது.
ரகசியம் என்ன?
நமது மூதாதையர்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்ததற்கு காரணம் கலப்படமற்ற பயிர்கள், உணவு தானியங்கள் என்று சொல்லலாம். எனினும் அவர்கள் தண்ணீர் அருந்த, உணவு சமைக்க, உண்ண களிமண்ணால் ஆன பாத்திரங்களையே பயன்படுத்தி வந்தனர். இதனால் இயற்கை காய்கறிகள், உணவு தானியங்களின் மூலம் கிடைத்த சத்துகளுடன் களிமண்ணில் உள்ள தாதுக்களும் அவர்களுக்கு கிடைத்தன.
மெல்ல மெல்ல குறைந்தது
பின்னர் களிமண் பாத்திரங்கள் பராமரிக்க முடியாததால் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். எனினும் இன்று வரை அசைவ உணவுகளையும், கூழ் வகைகளையும் களிமண் பாத்திரத்தில் செய்தால் அதன் ருசியும் சத்தும் கூடும் என்பதால் பயன்படுத்தி வருகின்றனர்.
இயந்திர உலகில்...
இன்றைய காலகட்டங்களில் கணவன் மனைவி இருவருமே வேலை செல்வதால், அந்த ஸ்டீல் பாத்திரங்களை விடுத்து எலெக்ட்ரிக் குக்கர், ரைஸ் குக்கர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட பொருள்களுக்கு மாறிவிட்டனர். என்றாலும், களிமண்ணில் பாட்டி கையால் சாப்பிட்ட சுவையை இன்று வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அம்மிகளும், உரல்களும் மிக்ஸி, கிரைண்டர்களாக மாறிவிட்டன.
மீண்டும் களிமண் பாத்திரங்கள்
தற்போது ஆங்காங்கே களிமண்ணால் ஆன பாத்திரங்கள் காணப்பட்டாலும் அவற்றை வெகு சிலரே வாங்கிக் கொள்கின்றனர். இதை கருத்தில் கொண்டு நவீன மங்கைகளுக்கு பயன்படுத்தி வரும் பாத்திரங்களில் களிமண் பொருள்களை கொண்டு செய்யப்படுகின்றன.
சென்னையில்...
சென்னையில் மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிஃபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியன ராஜஸ்தான், குஜராத்தில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மண் பானைகளின் மகத்துவம் தெரிந்தவர்கள் கண்டிப்பாக வாங்கக் கூடும் என்பதால் அந்த மாநிலத்தில் டீலர்ஷிப் எடுக்கின்றனர்.
கரண்ட் இல்லாத பிரிட்ஜ்
மின்சாரம் பயன்படுத்தாமல் பிரிட்ஜ், அதுவும் களிமண்ணால் செய்யப்பட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம் 20 கிலோ கொண்ட அந்த பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட பொருள்களை வைத்தால் கெட்டு போகாமல், பிரஷ்ஷாக இருக்கும். இதன் விலை ரூ.5 ஆயிரம். மண் பானை குக்கர், வாட்டர் பாட்டில், தயிர் கப்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பானைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோக பொருள்கள் உள்ளன. அவை குறைந்தபட்சம் ரூ.250-லிருந்து அதிகபட்சமாக ரூ.5,000 வரை உள்ளன. தண்ணீர் பானைகள் குஜராத்தில் உள்ள ஆற்று களிமண்ணில் இருந்து செய்யப்பட்டவையாகும்.
விற்பனை அமோகம்
தற்போது விவசாயப் பயிர்களுக்கு பூச்சிகொல்லிகள் தெளித்து, செயற்கை உரங்கள் இடுவதால் உணவே விஷமாக மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய குழந்தைகளுக்கு கொஞ்சமாவது இயற்கை சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் விற்கப்படும் இந்த களிமண் பொருள்களை ஏராளமானோர் வாங்கி செல்கின்றனர். மண் பானைகளில் கால்சியம், பாஸ்பரஸ், சல்பர், மெக்னீஸியம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. மண் பானைகளில் காரத் தன்மை உடையது என்பதால் அவை காரத்தனமை கொண்ட உணவுகளுடன் எளிதில் கலந்து நாம் தயாரிக்கும் உணவுகளின் அமிலக்காரத்தன்மையை முறையாக சமன் செய்கிறது. எனவே இயற்கைக்கு முழுவதுமாக இல்லையெனில் ஓரளவுக்காவது மாறுவோம்.