முதல்வர் டூ துணை முதல்வர்... தர்மயுத்தத்திற்கு அஸ்திவாரம் போட்ட ஓ.பிஎஸ்ன் ராஜினாமா ஓராண்டு ரீகேப்!
முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு இதே நாளில் ராஜினாமா செய்தார், பின்னர் தர்மயுத்தம் நடத்தி துணை முதல்வர் பதவியை பெற்றார்.
சென்னை : முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு இதே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவை அடுத்து தான் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. தர்மயுத்தம் தொடங்கிய ஓராண்டு நிறைவு பெறும் நாளில் முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியோடு ஆட்சியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். தர்மயுத்தத்தின் ஓராண்டு நினைவுகளை இங்கே பார்க்கலாம்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவின் வெடித்த முதல் எதிர்ப்புக் குரல் ஓ.பன்னீர்செல்வத்துடையது. ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து நள்ளிரவில் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. கடந்த ஆண்டு இதே நாட்களில் சசிகலாவின் அதிகாரம் கட்சியிலும்,ஆட்சியிலும் தூள் பறந்தது.
கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக வேண்டும் என்று மதுசூதனன், தம்பிதுரை உள்ளிட்ட அதிமுகவினரும், அமைச்சர்களும் சசிகலாவை சந்தித்து வெளிப்படையாகவே கோரிக்கை வைத்தனர்.
கோலோச்சிய சசிகலா
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜெயா டிவியில் ஒளிபரப்பான செய்தி என்றால் முத்து படத்தில் மீனா காலில் டீக்கடைக்காரர்கள் விழுந்து விழுந்துவணங்குவது போல, போயஸ்கார்டனில் சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று அதிமுகவினர் கூப்பாடு போட்டனர்(போட வைத்தனர்).
பிப்ரவரி 5ல் முதல்வர் பதவி ராஜினாமா
இதன் தொடர்ச்சியாக 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை அடுத்து சசிகலா முதல்வராவற்கான வேலைகள் ஜரூராக நடக்கத் தொடங்கின.
தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம்
ஆனால் ராஜினாமா செய்ததோடு ஓ.பன்னீர்செல்வம் சும்மா இல்லை தன்னை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்யவைத்தார்கள் என்று பிப்ரவரி 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்துவிட்டு அதிமுக அரசியலில் பரபரப்பை கிளப்பினார். தர்மயுத்தம், எம்எல்ஏக்கள் அணி மாறும் படலம், முடிவெடுக்காமல் தாமதப்படுத்திய ஆளுநர், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் என்று கடந்த ஆண்டு அரசியல் பரபரப்புகளுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது பிப்ரவரி 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தது.
தர்மயுத்தத்திற்கு கிடைத்த பலன்
இறுதியில் பிரிந்த இரண்டு அணிகளும் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தற்போது கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகளை பங்கு போட்டு சமாதானமாகிவிட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் ராஜினாமா செய்து, தர்மயுத்தம் நடத்தி துணை முதல்வரானது தான் ஓராண்டில் ஓ.பன்னீர்செல்வம் வாழ்வில் தர்மயுத்தம் செய்த மாற்றம் எனலாம்.