பாஜகவுடன் கூட்டும் இல்லை ஆதரவும் இல்லை- முதல்வர் பளிச்
பாஜகவுடன் கூட்டும் இல்லை ஆதரவும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. இன்றைய தினம் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர் சிறிய கதையை சொல்லினார்.
அந்த கதையின் சாராம்சம் என்னவென்றால், பாஜகவுடன் நட்பாக உள்ள அதிமுக அரசால் காவிரி விவகாரத்தில் தீர்வு காணமுடியவில்லை என்றார்.
ஆதரவும் இல்லை
திமுக உறுப்பினரின் இந்த கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் திமுக உறுப்பினர் கூறிய கதை திமுகவுக்குத்தான் பொருந்தும். காவிரி விவகாரத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை.
எடுத்ததில்லை
அப்படி இல்லாத நிலையிலும் காவிரிக்காக அதிமுக நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் வருகிறது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோதிலும் காவிரி தொடர்பாக நடவடிக்கை எடுத்ததில்லை என்றார்.
அதிமுக அரசு
ஜெயலலிதா மறைந்தவுடன் எடப்பாடி தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் நட்புடன் இருந்துவருவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்தது. தமிழகத்தில் பாஜக செயல்படுத்தும் திட்டங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக பாஜகவை அதிமுக ஆதரித்து வருவதாகவும் புகார் நிலவுகிறது.
முக்கியத்துவம்
இந்நிலையில் முதல்வர் பேரவையில் பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை என்ற கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.