தமிழக சட்டசபை கூட்டம் இன்று நிறைவு - எம்.எல்.ஏக்களுக்கு தேனீர் விருந்து அளிக்கிறார் ஜெ.!
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் 34 நாட்களாக நடைபெற்று வரும் 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான பட்ஜெட் கூட்டத்தொடரானது செவ்வாய்க்கிழமையான இன்றுடன் நிறைவடைய உள்ளது.
சட்டசபையின் வழக்கப்படி, ஒவ்வொரு முறையும் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும் போது, எம்.எல்.ஏக்களுக்கு தேனீர் விருந்து அளிக்கப்படும். இது நடைமுறையில் உள்ள வழக்கம் ஆகும்.
அந்த வகையில், இன்று கூட்டத்தொடர் நிறைவு பெற்றவுடன் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தேனீர் விருந்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கூட்டத்தொடர், நிறைவு நாளான இன்று, சட்டசபையில், 2014 - 15 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை சபைக்கு வழங்கப்படும்.
மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்படும். பகல் 2:00 மணிக்கு, விவாதம் முடிந்து, மானிய கோரிக்கைகள், ஓட்டெடுப்புக்கு விடப்படும்.