தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.. மாநிலம் முழுவதும் நடத்த ஜெயலலிதா உத்தரவு...
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி மற்றும் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 3 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என முதலமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது..
கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் நிற்க முடியும்' என்ற நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், அதிமுக அரசு மக்கள் பணியில் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் வெற்றி நடை போட்டுவருகிறது.
மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி, தேசிய அளவிலும் உலக அரங்கிலும் அதிமுக அரசு பாராட்டு பெற்று வருகிறது.
எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மின் தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் ஒளிர்கிறது. கடந்த 2011 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மக்களுக்கு அளித்த முதல் வாக்குறுதியை நிறைவேற்றிய பெருமிதம் அதிமுக அரசுக்கு உண்டு.
கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. 4 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் 5346.5 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் 3,330 மெகாவாட் மற்றும் 1,084 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் செய்ய 32 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் வயிறார உண்ண 298 அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையில் முதல்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
ஏழைகளுக்கு இலவச கறவை பசுக்கள், ஆடுகள், மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு காத்திருக்கிறது.
இந்த அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை விளக்கியும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையிலும் வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பர்.
பொதுக்கூட்டங்கள் முடிந்ததும், அதிமுகவினர் ஒன்றியம், நகரம், பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் இடங்கள், அதில் பங்கேற்போர் விவரங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.