காபி வித் எம்எல்ஏக்கள் நிகழ்ச்சிக்கு வராத எம்எல்ஏக்கள்.. காய்ச்சி எடுத்த இளைஞர்கள்
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்தித்து வாக்கு கேட்கும் எம்எல்ஏக்கள் அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை. இதனை கேள்வி கேட்கும் வகையில் காபி வித் எம்எல்ஏக்கள் என்ற நிகழ்ச்சியை
சென்னை: சென்னை வள்ளூவர் கோட்டத்தில் காபி வித் எம்எல்ஏ என்ற வினோத நிகழ்ச்சிக்கு அறப்போராட்ட இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளையும் எம்எல்ஏக்களையும் வறுத்தெடுத்தனர்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வேட்பாளர்கள் மக்களை வந்து சந்திப்பதாகவும், வெற்றி பெற்ற பின்பு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் கேட்பதில்லை என்று கூறி எம்எல்ஏக்கள் காபி குடித்து கொண்டே தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியை அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் பலரும் எம்எல்ஏக்கள் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டு மேடையில் அமர்ந்தனர். அவர்களிடம் கேள்வி கேட்பது போலவும் காபி அருந்துவது போலவும் இளைஞர்கள் வினோதமாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
நோக்கம்
வாக்களித்த மக்கள் எம்எல்ஏக்களை கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்ற இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், மக்களை எம்எல்ஏக்கள் மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தில்லாலங்கடி எம்எல்ஏக்கள்
மேலும், தேர்தல் நேரத்தில் மக்கள் கால்களில் விழுந்து வாக்கு சேகரிக்கும் எம்எல்ஏக்கள், அவர்கள் வென்றவுடன் மக்களைப் பற்றி எண்ணிக் கூட பார்ப்பதில்லை. ஜெயலலிதா மறைந்த உடன் தமிழகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்களின் தில்லாலங்கடி வேலைகளை அம்பலப்படுத்துவதும் இந்த நிகழ்ச்சியின் கருவாக அமைந்தது.
எல்லா மாவட்டங்களிலும்..
இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இனி மாவட்டங்கள் தோறும் நடத்தப்படும் என்று அறப்போராட்ட அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் எம்எல்ஏக்கள் மக்களை நேரடியாக சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதே கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முகமூடி எம்எல்ஏக்கள்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் மற்றும் அரசியல்வாதிகளை வறுத்தெடுத்தனர் இளைஞர்கள். எம்எல்ஏக்கள் போன்று முகமூடிகளை போட்டுக் கொண்டு மேடையில் அமர்ந்து அவர்களை போன்றே பதில் அளித்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.