மாணவர்களிடம் பல கோடி மோசடி.. சர்ச்சையில் சிக்கினார் கோவை அண்ணா பல்கலை. பேராசிரியர்!
பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அண்ணா பல்கலை. பேராசிரியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஆராய்ச்சி படிப்புகளுக்கு பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக கோவை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
கோபி அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் கடந்த 2010ம் ஆண்டு கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படிப்பிற்காக சேர்ந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறை இணை பேராசிரியராக பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் இதற்காக கடந்த 2015ம் ஆண்டு வரை ரூ.10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
அதன் பின்னர் படிப்பு முடியும் போது, ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிப்பதற்காக கிருபாகரனிடம் மேலும் ரூ.4 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிருபாகரன் அந்த தொகையை தர இயலவில்லை என கிருபாகரன் கூறியதுடன், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப தராமலும், ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க எவ்வித உதவியும் செய்யாத நிலையில் கிருபாகரன், இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம், முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட பலரிடமும் புகார் அளித்துள்ளார்.
இதனால் இணை பேராசியரியர் வெங்கடேசன், மாணவர் கிருபாகரனை தொடர்பு கொண்டு, உடனடியாக தன்னால் முன்தொகையையும் தரமுடியாது எனவும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுவதாக கூறி உள்ளார். ஆனால் வெங்கடேசன் சொன்னடிப பணத்தை தரவில்லை. எனவே கிருபாகரன் மீண்டும் புகார் வெங்கடேசன் மீது அளித்தார். அதன் அடிப்படையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கிருபாகரனிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இணை பேராசிரியர் வெங்கடேஷ், சார்பில் சிலர் கிருபாகரனை தொடர்பு கொண்டு பணம் பெற்றுத்தருவதாகவும், பிரச்சினை செய்ய வேண்டாம் எனவும் கூறி உள்ளனர். ஆனால் ஏற்கெனவே வெங்கடேசன் கூறியவாறு பணம் தராத நிலையில் அவர்களது பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை.
இதுகுறித்து மாணவர் கிருபாகரன் கூறியதாவது, என்னை போல் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை வெங்கடேசன் பணம் பெற்றுள்ளார். அதே போன்று ஒரு மாணவியிடம் தங்க நாணயங்களும் பெற்று ஏமாற்றி உள்ளார். இவர் மீது பல்கலைக்கழக முதல்வர் சரவணக்குமார், துணைத்தலைவர் சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர்.
மேலும் இவர் இங்கு பணியில் சேருவதற்கு முன்னர் அன்னை மாதம்மாள் ஷீலா கல்லூரியில் பணிபுரிந்தது போன்று போலியான சான்றிதழ்களை கொடுத்துதான் இங்கும் பணியில் சேர்ந்துள்ளார். இவர் மீது பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஏற்கனவே வெங்கடேசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், மாணவர் கிருபாகரன் உள்ளிட்ட 5 பேர் தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.