சொன்னீங்களே, செஞ்சீங்களா... மக்களுக்காகவே நான்... ஆறுமுகம், ஏறுமுகம்... திரும்பத் திரும்ப!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
முக்கிய கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இடங்கள் தான் மாறுகிறதே தவிர தலைவர்களின் பிரச்சார வார்த்தைகள் மாறுவதில்லை.
அந்தவகையில் முக்கிய தலைவர்களின் பிரச்சாரத்தில் அடிக்கடி இடம்பெறும் முக்கிய சில வார்த்தைகள் பற்றிய தொகுப்பு இது.
மக்களுக்காக நான்...
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் பார்ப்பதே அரிது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தற்போது அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு தாய்ககுத்த்தான் தெரியும்
அவரது அனைத்து பிரச்சாரங்களிலும் தவறாது இடம் பெற்றிருக்கும் வார்த்தைகள் என, ‘மக்களுக்காக நான், மக்களால் நான். சொல்வதைச் செய்வேன். சொல்லாததையும் செய்வேன். ஒரு தாய்க்கு தெரியும், பிள்ளைகளுக்கு என்ன தேவை என..' இவற்றைக் குறிப்பிடலாம். (ஆனால் இந்தத் தாய்க்கு தெரியும் என்பதை வைத்து ஏகப்பட்ட லொள்ளு மீம்ஸ்கள் ஓடிக் கொண்டுள்ளன)
சொன்னீங்களே... செஞ்சீங்களா?
இதேபோல், திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பிரச்சாரங்களில், ‘சொன்னீங்களே, செஞ்சீங்களா?' என மறக்காமல் கேட்டு வருகிறார். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதா செய்வீர்களா? செய்வீர்களா? எனக் கேட்டிருந்தார். எனவே, அதை வைத்தே திமுகவினர், செஞ்சீங்களா? செஞ்சீங்களா? என பிரச்சாரங்களில் கேட்டு வருகின்றனர்.
மாற்றம்... முன்னேற்றம்...
இம்முறை சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது பாமக. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். எனவே, அன்புமணி ராமதாஸின் பிரச்சாரத்தில், ‘மாற்றம்... முன்னேற்றம்...' என்பது மறக்காமல் இடம் பெற்று வருகிறது. பாமவினரும் அதனை வழிமொழிந்து வருகின்றனர்.
தமிழகம் மலரட்டும்...
கடந்த தேர்தல்களில் மோடி அலையை முன்னிறுத்திய பாஜகவினர், இம்முறை தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும் என்றும், மாற்றத்திற்கான நேரம் இது என்றும் தொடர்ந்து பிரச்சார மேடைகளில் முழங்கி வருகின்றனர்.
ஆறுமுகம்... ஏறுமுகம்...
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கினர். பின்னர் தேமுதிகவுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து அது பாண்டவர் அணி எனப் பேர் பெற்றது. பின்னர் அக்கூட்டணியில் தமாகாவும் சேர்ந்ததைத் தொடர்ந்து கூட்டணித் தலைவர்களின் எண்ணிக்கை ஆறு ஆனது. இதனால், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா முதற்கொண்டு அனைவரும் ‘இது ஆறுமுகம் கொண்ட கூட்டணி. எங்களுக்கு ஏறுமுகம்' தான் என மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.