ஜெயலலிதாவுக்கு கறுப்பு கொடி: சங்கரன்கோவில் கல்லூரிக்கு கட்டாய விடுமுறை!
நெல்லை: முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரத்துக்கு சங்கரன்கோவில் வரும் போது கல்லூரி மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், அந்த பகுதியில் உள்ள உறுப்புக்கல்லூரிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான சங்கரன்கோவில், புளியங்குடி, கோவிந்தப்பேரி, நாகம்பட்டி, பணகுடி, திசையன்விளை ஆகிய இடங்களில் மனோகல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், சங்கரன்கோவில் மனோ கல்லூரியானது கடந்த 14 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில்தான் இயங்குகிறது. இக்கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் கட்டித்தரக்கோரி இடைத்தேர்தலுக்கு வந்த அமைச்சர்களிடமும், அதன் பின், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ முத்துச்செல்வியிடமும் பலமுறை கூறியும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கறுப்புக்கொடி போராட்டம்
கட்டிட வசதிகள் மட்டுமின்றி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட சரியாக இல்லை. இதுவரை தங்களது கோரிக்கை நிறைவேறாததாலும், இலவச லேப்டாப் வழங்காததைக் கண்டித்தும் இன்று வருகைதரும் முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவர்கள் கூறினார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக, இந்திய மாணவர் சங்கமும் இணைந்து மனோகல்லூரி மாணவிகளை ஒன்றிணைத்து 19, 20 மற்றும் 21 ஆகிய மூன்று நாட்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோக் கூறிவருகிறார்.
கல்லூரிகளுக்கு விடுமுறை
மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரின் யூகம் அறிந்து மனோகல்லூரிகளின் முதல்வர்கள், காரணம் ஏதும் அறிவிக்காமல் வரும் திங்கள் வரை சங்கரன்கோவில் உறுப்புக் கல்லூரி மட்டுமல்லாமல் ஆறு மனோ உறுப்புக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளனர்.
பேராசிரியர் மீது புகார்
ஆனால், "கோவிந்தப்பேரி மனோகல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்" என்று மாணவி ஒருவர் கல்லூரி முதல்வரிடம் புகார் செய்துள்ளாராம். கோவிந்தப்பேரி மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராட்டம் செய்துவிடக்கூடாது என்ற பிரச்னையில் சங்கரன்கோவில் போராட்டத்தை கருத்தில் வைத்து கோவிந்தபேரி மனோகல்லூரிக்கும் விடுமுறை அளித்து புகாரை மூடி மறைத்துவிட்டார்களாம். இனி போராட்டம் திங்கள் கிழமை மீண்டும் வெடிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள மற்ற கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் நிலையில் குறிப்பிட்ட இந்த ஆறு கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.