பிளஸ் டூ ரிசல்ட் பேப்பரில் ஒரே பிறந்த தேதி... கனிணி தவறால் குழம்பிப் போன வேலூர் மாணவர்கள்
வேலூர்: பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஒரே பிறந்த தேதி போட்டிருப்பதால் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குழப்பமாகியுள்ளது.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் வேலூர் மாவட்டத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் நகரில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளி, கான்கிரிடியா மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ்டூ தேர்வு எழுதியுள்ளனர்.
அவர்கள், இன்று மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றபோது, மதிப்பெண் பட்டியலில் அனைத்து மாணவர் மாணவிகளுக்கும் பிறந்த தேதி ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டுள்ளதை அறிந்தனர். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எப்படி இந்தக் குழப்பம் நேரிட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் இது கம்ப்யூட்டரில் உள்ளிட்டபோது நடந்த குழப்பமாகவே இருக்கும் என்று தெரிகிறது. மதிப்பெண் பட்டியலிலும் இதேபோல தவறாக வந்தால் என்ன செய்வது என்று மாணவ, மாணவியர்கள் அச்சமடைந்துள்ளனர்.