கன்னியாகுமரியை தமிழகத்தில் இருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க கோருகிறது காங்கிரஸ்!
தமிழக சட்டசபையில் நேற்று இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை ஆகியவற்றின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. எவரது பெயருமே அழைக்கப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேசுவதற்கு பதிலாக பதிலுரை அளிக்கும்படி விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரை சபாநாயகர் அழைத்தார்.
பேசுவதற்கு தயாராக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஏமாற்றம் அளித்தது. இதனால் அமைச்சர் பதிலுரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், விஜயதரணி, பிரின்ஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர் இருக்கைக்குச்சென்று விவாதத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைக்கப்படாதது பற்றி ஜான் ஜேக்கப் மற்றும் விஜயதரணி முறையிட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர். இதுபற்றி சட்டசபைக்கு வெளியே ஜான் ஜேக்கப் கூறியதாவது:
நாங்கள் 3 பேருமே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். அந்த மாவட்டத்தில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இதுபற்றி பெரிய அளவில் பேசிவிடுவோம் என்பதால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். ஏற்கனவே இரண்டு மானியக்கோரிக்கைகளில் பேச காங்கிரசுக்கு அனுமதி தரப்படவில்லை.
நெல்லைதான் எங்களுக்கு எல்லை, கன்னியாகுமரி எங்களுக்கு தொல்லை என்று ஏற்கனவே தி.மு.க.வும் கூறியுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.