காமராஜர் எல்லோரையும் படிக்கச் சொன்னார்... இப்போது குடிக்கச் சொல்கிறார்கள்: ஈவிகேஎஸ் கிண்டல்
சென்னை: மது ஒழிப்பு போராட்டத்தின் ஆரம்பம் தான் இது. என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. மதுவை ஒழிக்கும் வரை போராடுவோம் எனச் சென்னையில் நடந்த மதுவிலக்கு ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை எதிர்த்து டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழக கலைக் குழு மையப் பொறுப்பாளரான பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுளார்.
கோவனின் கைதைக் கண்டித்தும், பூரண மதுவிலக்கை வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இது நியாயமா..?
தமிழகத்தில் ஆறாக ஓடும் மதுவின் காரணமாக தாய்மார்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த வேதனையை பாட்டாக பாடிய கோவனை கைது செய்தது நியாயம் தானா? மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வும் எழுச்சியும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
எங்களது கடமை...
பேச்சுரிமை, எழுத்துரிமையை வாங்கி தந்தது காங்கிரஸ்தான். எனவே பறிக்கப்படும் இந்த உரிமைகளை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது.
குடிக்கச் சொல்லும் அரசு...
காமராஜர் எல்லோரையும் படிக்க சொன்னார். ஆனால் இப்போது எல்லோரையும் குடிக்க சொல்கிறார்கள். இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் 20 லட்சம் இளம் விதவைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய கண்ணீருக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
கோவனை விடுதலை செய்க....
மக்கள் நல்ல படியாக வாழ வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. தொண்டர்கள் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பலம் இருக்கும் வரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
இது ஆரம்பம் தான்...
மது ஒழிப்பு போராட்டத்தின் ஆரம்பம் தான் இது. என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. மதுவை ஒழிக்கும் வரை போராடுவோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்...
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், யசோதா, செல்வப் பெருந்தகை, கோபண்ணா, தணிகாசலம், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாக ராஜன், ரங்கபாஷியம், ராயபுரம் மனோ மற்றும் ஜி.கே.தாஸ், நாஞ்சில் பிரசாத், எம்.ஆர்.ஏழுமலை, ரூபி மனோகரன், குங்பூ விஜயன், ஜெ.எம்.எச். அசன் ஆரூண், வக்கீல் நவாஸ், விருகை ராமச்சந்திரன், கவுன்சிலர் தமிழ்செல்வன், தி.நகர் ஸ்ரீராம், சூளை ராஜேந்திரன், நாச்சிக்குளம் சரவணன், ஹரிகிருஷ்ண ரெட்டி,காமராஜ், ரஞ்சன் குமார், இந்துநாதன், கமலக் கண்ணன், உடையார் எஸ்.கே. சோமசுந்தரம், விவேகானந்தன், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.