துபாயில் இருந்து கள்ள நோட்டுகள் வந்ததா… சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர்களில் விடிய விடிய சோதனை
தினமும் 10 ஆயிரம் கண்டெய்னர்களை கையாளும் சென்னை துறைமுகத்தில் துபாயில் இருந்து கள்ள நோட்டுக்கள் வந்ததா என்ற கோணத்தில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
சென்னை: துபாயில் இருந்து சரக்கு கண்டெய்னர் லாரிகளில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்துள்ளதா என சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினார்கள்.
சென்னை துறைமுகத்திற்கு வந்து ஒரு கண்டெய்னர் முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சோதனை நடத்தினார்கள். துபாயில் இருந்து கடத்தி வரப்பட்டதா கள்ள நோட்டுகள் என்ற கோணத்திலும் அவர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ள நோட்டு
கடந்த மாதம் 24ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுக்களை துபாயில் இருந்து இந்தியாவிற்கு கண்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சோதனை
இதனையடுத்து சென்னை துறைமுக சுங்க அதிகாரிகளுக்கு, இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னர்களை வெளியே அனுப்பக் கூடாது என அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கண்டெய்னர்கள் கையாள்வதில் நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது
வாயில் மூடல்
இதனால் லாரிகள் நுழையும் பிரதான வாயிலும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்டெய்னர்களின் நெரிசல் அதிகரித்ததோடு, வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கன்டெய்னர்கள், தீவிர ஆய்வுக்கு பின், கப்பலில் ஏற்றப்பட்டன.
1000 கண்டெய்னருக்கு மேல்…
மத்திய அரசு அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவு காரணமாக, கண்டெய்னர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மார்ச் 1ம் முதல் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து கண்டெய்னர்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன என்று துறைமுக வட்டார அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று மாலை, 3 மணி முதல், சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள, 32 சரக்கு பெட்டக நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் பெட்டிகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
வருவாய் இழப்பு
துறைமுக வாயில் மூடப்பட்டதால், எண்ணூர் கடற்கரை சாலை, எர்ணாவூர், மணலி சாலை, ஜி.என்.டி., சாலை முழுக்க கண்டெய்னர் லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன. சென்னை துறைமுகத்தில் இறக்குமதி நிறுத்தப்பட்டதால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து…
2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அனைத்து துபாயில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அதற்கான சிறப்பு ஸ்கேனர்கள் மூலம் கண்டெய்னர் லாரிகள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. விரைவில், இந்த சோதனைகள் முடிவடைந்து கண்டெய்னர் லாரிகளின் போக்குவரத்து சீராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.