அனைத்துச் சாலைகளிலும் வரலாறு காணாத ட்ராஃபிக்... திக்கித் திணறும் சென்னை!
சென்னை: சென்னை மாநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று காலையிலிருந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நகரின் அனைத்து பிரதான சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாக வாகன ஓட்டிகள், பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலையிலிருந்தே சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை நகரம், புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை.
இதனால் எல்லா பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல, போக்குவரத்து ஸ்தம்பித்தது. அண்ணா சாலை, ஆற்காடு சாலை, மவுன்ட் பூந்தமல்லி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, தி நகருக்குச் செல்லும் பிரதான சாலைகள், அமைந்தகரை சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை என பெரும்பாலான சாலைகளில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல்.
அடையாறிலிருந்து வடபழனி வர 2.30 மணி நேரம் பிடித்ததாக வாகன ஓட்டி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கு மழை மட்டும் காரணமல்ல... தேவர் ஜெயந்தி என்பதால் அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் அவருக்கு அஞ்சலி செலுத்த தங்கள் ஆதரவாளர்களுடன் குவிந்துள்ளதும் ஒரு காரணம். இந்த கன மழையிலும், தங்கள் அஞ்சலியைச் செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.
இன்றைய தினம் சென்னை நகருக்குள் செல்பவர்கள் திரும்பி வருவதற்குள் ஒரு நரகத்தைச் சந்திக்க வேண்டும் என்கிறார்கள் அவதிக்குள்ளான அனுபவஸ்தர்கள்.












Click it and Unblock the Notifications