சென்னை ஐஐடியில் பாலியல் தொந்தரவு.... 'செக்யூரிட்டி' நியமனங்களில் புதிய சர்ச்சை
சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் அண்மையில் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக 20 வயது செக்யூரிட்டி கார்டு முஸ்தாபா அகமது கைது செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து செக்யூரிட்டு கார்டுகள் நியமனத்துக்கு வயது வரம்பு உள்ள நிலையில் அதை மீறி 20 வயதான இளைஞர் எப்படி ஐஐடியில் நியமிக்கப்பட்டார் என்ற புதிய சர்ச்சையும் வெடித்துள்ளது.
அண்மையில் சென்னை ஐஐடியின் ஆண்டு விழாவான சாரங் நடைபெற்ற போது வேளச்சேரி கேட் அருகே மாணவி ஒருவருக்கு ஐஐடி செக்யூரிட்டி கார்டு ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த சகமாணவர்கள் அந்த செக்யூரிட்டி கார்டை சுற்றி வளைத்தப்போது அவர் தப்பி ஓடியிருக்கிறார்.
இச்சம்பவத்தின் போது அந்த செக்யூரிட்டியின் தொப்பி மட்டும்தான் கீழே விழுந்திருந்தது. அந்நபர் அடையாள அட்டையும் அணிந்திருக்கவில்லை. இது குறித்து கோட்டூர்புரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் முஸ்தபா அகமது என்பவர் இந்த இழிசெயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்தனர். அதே நேரத்தில் பிரச்சனை இத்துடன் முடிவடைந்தும் விடவில்லை.
சென்னை ஐஐடியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக மாணவர்களே ஒரு குழு அமைத்து ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வு விவரங்கள் சென்னை ஐஐடியினருக்கு மட்டுமான The Fifth Estate (T5E) என்ற பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
அதில், சென்னை ஐஐடிக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் நியமிக்கும் செக்யூரிட்டிகளுக்கு 25 முதல் 40 வயது இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இதனை மீறி 20 வயதே ஆன முஸ்தாபா அகமது எப்படி நியமிக்கப்பட்டார்? என்ற கேள்வியைத்தான் மாணவர்கள் தங்களது The Fifth Estate (T5E) பத்திரிகையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் தமிழக தனியார் நிறுவன பாதுகாப்புச் சட்டங்களின்படி, பணியில் உள்ள செக்யூரிட்டிகள், அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்; ஆனால் ஐஐடி பணியில் இருந்த செக்யூரிட்டி முஸ்தாபா அகமது, அப்படி அடையாள அட்டை எதுவும் அணிந்திருக்கவில்லை.
இதனால் சென்னை ஐஐடியில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது; இதனால் கூடுதலான பெண் செக்யூரிட்டி கார்டுகளை நியமிக்க வேண்டும்; செக்யூரிட்டி கண்ட்ரோல் அறையிலும் பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.