தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: சிபிஐ எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு நீதிமன்றம் சம்மன்
சிவகங்கை: நீதி மன்ற வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காத, சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு சம்மன் அனுப்ப நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 2011 ம் வருடம் ஏப்ரல் மாதம் 2 ம் தேதி அன்று தேர்தல் பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, தேர்தல் விதிமுறைக்கு எதிராக குணசேகரன் ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை சிவகங்கை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகின்றது
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் எம்.எல்.ஏ. தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, சிவகங்கை நீதி மன்றத்தில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிவகங்கை மாவட்ட காவல் ஆய்வாளர் அஷ்வின் கோட்னீஸ் மூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர் குணசேகரனை நீதி மன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்க மாஜிஸ்திரேட் வெங்கடேச பெருமாள் உத்தரவிட்டார்.
இதற்கான நீதி மன்ற உத்தரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.