கோவையை தக்க வைப்பாரா சிட்டிங் சி.பி.எம் எம்.பி நடராஜன்?
கோவை: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர். நடராஜன் (வயது 64) மீண்டும் போட்டியிடுகிறார்.
கல்லூரியில் இளங்கலை படிக்கும் பொழுதே அரசியலில் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்க தலைவராக செயல்பட்டவர், பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றியவர். இவர் கடந்த 38 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றி மறைந்த தோழர் கே. ரமணி அவர்களின் மூத்த மருமகன் ஆவார். இவருக்கு வனஜா என்ற மனைவியும், ஆர்த்தி, அருணா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய கடந்த 5 ஆண்டு காலத்தில் இவருடைய முயற்சியின் காரணமாக கோவை ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டதோடு, 11 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பாலக்காடு செல்லும் 5 ரயில்கள் கோவை வழியாக செல்லாமல் போத்தனூர் சென்று கொண்டிருந்தது. இவருடைய முயற்சியின் காரணமாக அந்த 5 ரயில்களும் கோவை வழியாக தற்போது செல்கிறது. இதற்காக கோவை தொழில்துறை அமைப்பு, இந்திய வர்த்தகர் சங்கம், மலையாளிகள் சங்கம் ஆகியவை இணைந்து பாராட்டு விழா நடத்தியுள்ளன.
கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்க நடைபாதை, எக்ஸ்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மாநில அரசு நீண்ட காலமாக இழப்பீடு வழங்காமல் இருந்தது.
இவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் காரணமாக வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் முதல் தவணையாக ரூ. 42 கோடி பெற்று தந்தார். கோவையில் இரண்டாவது அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி 800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு தற்பொழுது திறக்கும் நிலையில் உள்ளது. மேலும் கரும்பு ஆராய்ச்சி நிலையம், ஜவுளித்துறை ஆராய்ச்சி நிலையம், தேசிய பஞ்சாலைக் கழகம், அரசு அச்சகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை பெற்றுத் தந்தார்.
நாடாளுமன்றத்தில் தொழிலாளர்துறை, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தொழில்துறை ஆகிய துறையில் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு கோவை தொகுதியில் வெற்றி பெற்றார். இம்முறை தனித்து களமிறங்குகிறார். ஐந்தாண்டு கால சாதனை இவருக்கு கைகொடுக்கும் என்பது மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.