சில தொகுதிகளில் கம்யூ. தனித்து போட்டி: மற்ற இடங்களில் பாஜக எதிர்ப்பு கட்சிக்கு ஆதரவு!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது பற்றி முடிவெடுக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் சி.மகேந்திரன், கோ.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில தலைவர்களில் ஒருவரான தா. பாண்டியன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ''நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட சில தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
வருகின்ற 15 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூடுகிறது. நிர்வாகக்குழு கூட்டத்தில் தொகுதி, வேட்பாளர் விவரம் பற்றி பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேலும், பிற தொகுதிகளை பா.ஜ.க.வை வீழ்த்தக்கூடிய சக்தியுள்ள கட்சிக்கு ஆதரவு அளிப்போம்" என்று அவர்கள் மேலும் கூறினர்.
மார்க்சிஸ்ட் வரவேற்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், "மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் வரும் 14-ம் தேதியும், மாநிலக் குழுக் கூட்டம் 16-ம் தேதியும் சென்னையில் நடக்கவுள்ளன. அந்தக் கூட்டங்களில் தேர்தல் உத்திகள் குறித்த இறுதியான முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.