தமிழக மீனவர்களைச் சித்ரவதை செய்வதே ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கை- தா.பாண்டியன்
சென்னை: தமிழக மீனவர்களை சித்ரவதை செய்வதே ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ''இராமநாதபுரம் தங்கச்சி மடம் கிராமத்தை சார்ந்த மீனவர்கள் லாங்லெட்,பிரசாத்,அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய ஐந்து மீனவர்களுக்கும் இலங்கை உயர்நீதிமன்றம் மரணதண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு போதைப் பொருள்கள் கடத்தியதாக இலங்கை கப்பற்படையால் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
தமிழக மக்களுக்கு அதிர்ச்சி:
ஐந்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.
ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கை:
தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்தும், சித்ரவதை செய்வதும், ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.
அப்பாவிகளான மீனவர்கள்:
இந்த நிலையில் இந்த தூக்குத் தண்டனை வழங்கும் மற்றொரு நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளது. மீனவர்கள் அப்பாவிகள் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்ய நடவடிக்கை:
இந்திய அரசு, தலையிட்டு இந்த அப்பாவி மீனவர்களை உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.