'முட்டை ஊழல்': அதிமுக அரசு மீது முதல் முறையாக ஊழல் புகார் சொல்லும் சி.பி.எம்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல் முறையாக 'முட்டை கொள்முதல்' ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
தமிழகத்தில் சத்துணவுக்கு பருப்பு மற்றும் முட்டை கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடைபெற்றுள்ளதாக அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ராமதாஸ் ஆஜராக நீதிமன்றம் சம்மனும் அனுப்பியுள்ளது.
ஆனால் மார்க்சிஸ் கட்சியினர் இது தொடர்பாக மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று என். சீனிவாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
முட்டை கொள்முதலில் மெகா ஊழல் - சிபிஐ விசாரணை நடத்துக.
தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உயர்நிலைப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவோடு வழங்கப்படும் முட்டை கொள்முதலில் பலகோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தந்தப் பகுதியில் கொள்முதல் செய்வதற்கு பதிலாக மாநிலம் முழுவதும் ஒருவரே கொள்முதல் செய்யும் வகையில் டெண்டர் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. சில்லரை விற்பனையில் ஒரு முட்டை ரூ. 3.40பைசாவிற்கு கிடைக்கிறது. முட்டை உற்பத்தியாளர்களுக்கு அரசு ஒரு முட்டைக்கு ரூ. 3.18 செலுத்துவதாக தகவல் கூறுகிறது.
ஆனால் மாநில அரசு ஒவ்வொரு முட்டைக்கும் ரூ. 4.50 கொடுத்து கொள்முதல் செய்கிறது. இதனால் மாதந்தோறும் பலகோடி ரூபாய் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. தினசரி சுமார் 60 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதால் ஒவ்வொரு நாளும் சுமார் 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
அதிகாரத்தில் உள்ளோர் டெண்டர் எடுத்தவர்கள் மூலம் அரசு பணத்தை முறைகேடாக திரும்பப்பெறுவதற்கான முறையிலேயே இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே டெண்டர் முறையில் முறைகேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மொத்தக் கொள்முதலில் சில்லரை விற்பனையை விட அதிக தொகை கொடுத்து கொள்முதல் செய்வது; இதனால் பலன்பெறும் விற்பனையாளர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் உள்ளோர் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநிலத்தின் உயர்பொறுப்பில் உள்ளோர் இம்முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். எனவே முட்டை கொள்முதல் விலையில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மத்திய அரசின் மக்கள் விரோத மசோதாக்களை ஒன்றுபட்டு முறியடித்திடுக
மத்திய பாஜக அரசு தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து தங்குதடையற்ற சுரண்டலுக்கும் கேள்வி கேட்பாரற்ற வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் தொழிலாளர் நல சட்டத்தை திருத்தும் மசோதாக்களின் ஒன்றை நேற்று மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
அடுத்தடுத்து பல திருத்த மசோதாக்களை நிறைவேற்றிட திட்டமிட்டுள்ளது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் 5 கோடி ரூபாய் மூலதனத்தில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு ஐந்தாண்டு திட்ட காலத்திலும் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடிகளை வழங்கி மக்களை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் துறையை அந்நிய மூலதனத்திற்கு அகல திறந்துவிடும் மசோதா, விவசாயிகளின் விளைநிலங்களை பிடுங்கி அந்நிய கம்பெனிகளுக்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்க வகை செய்யும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா மற்றும் தேசிய பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், வழித்தட அனுமதி, கட்டண நிர்ணயம் உள்ளிட்டு அனைத்து வகையான அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் தனியாருக்கு மேற்கண்ட உரிமைகளை வழங்கும் மசோதா என்று பல மக்கள் விரோத மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரிலேயே சட்டமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப்பகுதி உழைக்கும் மக்களும் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத்திருத்த மசோதாக்களை எதிர்த்து குரலெழுப்பிட வேண்டுகிறோம். அனைத்துப்பகுதி மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடிய இந்த மசோதாக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இணைந்து நின்று முறியடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் வேண்டிக் கொள்கிறது.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.