கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
சென்னை: தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானத்தில், தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட வேண்டிய 1000 கோடி ரூபாய்க்கும் மேலான நிலுவைத் தொகையானது அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்கக் கோரியும் கடந்த 2 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசானது இவ்விவகாரத்தில் தலையிட்டு விவசாய சங்கத்தினர் மற்றும் ஆலை முதலாளிகள் இணைந்த முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மேல் கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மாற்றப்படவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.