சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதால் ஞாயிறு ஊரடங்கு வேண்டாம்..கோரிக்கை வைக்கும் விக்கிரமராஜா
திருப்பத்தூர் : ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கினை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வணிகர் சங்கங்களின் சார்பில் பல்வேறு இடங்களில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் தேவஸ்தானம் பகுதியில் அமைய உள்ள தனியார் திறப்பு விழா நிகழ்ச்சியில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கொரோனா பேரிடர்
நிகழ்சிக்குப் பின்னர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் மத்திய மாநில அரசுகள் வணிகர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் வணிகர்கள் மீது செலுத்தப்படும் அபராத தொகை மற்றும் சாதாரண வணிகர்களிடம் 2 ஆயிரம் 3 ஆயிரம் வீதம் அதிகாரிகள் வசூலிப்பதை கைவிட வேண்டும் அரசு வணிகர்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் எனவும்,தமிழக அரசு பொங்கல் தொகுப்பு பொருட்களை டெண்டர் விடப்பட்டு டெண்டர் எடுப்பவர்கள் பொருட்களை வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்கின்றனர். வரும் காலங்களில் அதனை தவிர்த்து அரசு பொருட்கள் கொள்முதல் செய்யும் பணிகளை வணிகர் சங்கங்களிடம் ஒப்படைக்கப்படுமேயானால் பொருட்கள் தரமாகவும் குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதனால் சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் பொருட்கள் வாங்குவதற்கு அதகளவில் கூடுவதால் அதனை தவிர்த்து வழக்கம் போல அனைத்து நாட்களிலும் கடைகள் செயல்பட்டால் மட்டுமே அரசுக்கு வருவாய் ஈட்டித் தரக்கூடிய வணிகர்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் எனவும், விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு எல்லா நாட்களிலும் கடைகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என கூறிய விக்கிரமராஜா, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வணிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள குறிப்பாக ஜவுளிக்கு உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றார்

வரி விகிதம்
அதேபோல் காலணிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் விதிக்கப்படும் சுங்க கட்டணம் என்பது கடுமையாக உயர்ந்து கொண்டுள்ளது என பேசிய அவர், சுங்கச்சாவடி என்பது அடிப்படை மக்களுக்காக விதிக்கப்பட்ட சாலை வசதிக்காக போடப்பட்டது இன்று அது கமர்ஷியலாக மாறி கொண்டிருக்கின்றது இதனை திருத்தம் செய்து விதிமுறைகள் வகுக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றார்.

சுங்கச்சாவடி கட்டணம்
சுங்கச் சாவடிகளில் ரவுடிகளை வைத்துக்கொண்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கையாகவும் வைக்கின்றது எனவும் விக்கிரமராஜா தெரிவித்தார்.. நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் மண்டல தலைவர் கிருஷ்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வாணியம்பாடி தலைவர் ஸ்ரீதர் மற்றும் கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications