ஓகி புயல், கனமழை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை #cycloneockhi
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவனா ஓகி புயலால் நேற்று முதல் தென் மாவட்டங்களில் கனமழை வெளுக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் உருக்குலைத்துவிட்டு அரபிக் கடலை நோக்கி நகர்ந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இம்மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று முதலே சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெல்லையில் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் 4 தாலுகாக்களிலும் சிவகங்கையில் 5 தாலுகாக்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.