புதுக்கோட்டை: இறந்த இளம்பெண் உயிரோடு திரும்பியதால் அதிர்ச்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தைல மரக்காட்டுப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தற்போது உயிரோடு திரும்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ராசியமங்கலம் தைலமரக்காட்டுப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி காலை 20 வயதான இளம்பெண் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஆலங்குடி போலீசார் அங்கு சென்று, பெண்ணின் உடலை மீட்டு புதுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை எஸ்பி உமா நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். ஆனால் இறந்தவர் பற்றி துப்பு கிடைக்கவில்லை. பின்னர், பத்திரிகைகளில் வெளியான படத்தை பார்த்த புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் அண்ணாநகரை சேர்ந்த சின்னையா என்பவர், இறந்து கிடந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன தங்களது மகள் வெண்ணிலாதான் என்று கூறி, உடலை பெற்றுச் சென்றனர். பின்னர் முறைப்படி இறுதிச்சடங்கும் செய்து எரித்தனர்.
இந்நிலையில், வெண்ணிலா தற்போது உயிருடன் ஊர் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வெண்ணிலா கூறியதாவது: என்னை எனது தாய்மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இது பிடிக்காததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கோவை சென்று விட்டேன்.
அங்குள்ள தனியார் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தேன். பின்னர், தகவலறிந்து கடந்த வாரம் அங்கு வந்த ஆலங்குடி போலீசார் என்னிடம் விசாரித்தபோது நடந்த எல்லாவற்றையும் நான் சொன்னேன். தீபாவளிக்கு முதல்நாள் அறந்தாங்கி நீதிமன்றத்திற்கு என்னையும் என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு சென்று நீதிபதியின் முன் ஆஜர் படுத்தினர்.
அப்போது நீதிபதி என்னிடம் நீ தான் செத்துப் போனதாகச் சொல்லப்படும் வெண்ணிலாவா என்று கேட்டார். நான் வெண்ணிலாதான். நான் சாகவில்லை என்றேன். வேறொன்றும் கேட்கவில்லை. பெற்றோருடன் வீட்டுக்கு வந்து விட்டேன். இவ்வாறு வெண்ணிலா கூறினார்.
ராசியமங்கலம் தைலமரக்காட்டுப் பகுதியில் இறந்து கிடந்தது வெண்ணிலா இல்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதால், உண்மையிலேயே அங்கு சடலமாக மீட்கப்பட்டது யார் என்பது புரியாத புதிராக உள்ளது.