மணற் கொள்ளை.. காவலர் கொலை... கருத்து தெரிவித்த ஜி.ராமகிருஷ்ணன் மீது ஜெ. வழக்கு
அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆறு உள்ளது. இந்த ஆற்றில் வேலூர் மாவட்ட எல்லை, திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகள் சேரும் பகுதியான புரிசை அருகே ஆற்றில் சிலர் அனுமதியின்றி மணல் எடுப்பதாக தக்கோலம் காவல்நிலைய போலீஸாருக்கு கடந்த சனிக்கிழமை தொலைபேசி வந்துள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி உத்தரவின்பேரில் எஸ்.ஐ. ராஜன், தலைமை காவலர் கனகராஜ் ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது சுமார் ஆறுக்கும் மேற்பட்ட நபர்கள், ஒரு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்ததை கண்டனர். ஆற்றின் கரையோரத்தில் மோட்டார் சைக்கிளை இருவரும் நிறுத்திவிட்டு ஆற்றினுள் இறங்கியதை பார்த்த அங்கிருந்தோர் மணல் அள்ளும் உபகரணங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டனராம். இந்நிலையில் வண்டியை கிளப்ப அதனுருகே ஒடிய டிரைவரை கனகராஜ் ஓடிச்சென்று பிடித்தாராம். அப்போது திடீரென டிராக்டரை டிரைவர் கிளப்பியதை அடுத்து டிராக்டர் சக்கரத்தில் கனகராஜ் சிக்கி அலறி உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் அதே வேகத்தில் டிராக்டரை கிளப்பிக்கொண்டு வேகமாக சென்று விட்டாராம்.
இச்சம்பவத்தில் ராஜன் கிட்டே வருவதற்குள் கனகராஜ் அலறிதுடிக்க ராஜன், அங்கிருந்தோரை கூக்குரலிட்டு அழைத்து அவர்களுடன் சேர்ந்து கனகராஜை கரைக்கு தூக்கி வந்துள்ளனர். கரைக்கு தூக்கி வந்தநிலையிலேயே கனகராஜ் இறந்து விட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையிலும் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் மீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், காவலர் கனகராஜ் பலியான சம்பவம் குறித்து அவதூறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அவரது அறிக்கை முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், அவர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது.