கிண்டி டூ பல்லாவரம்.. 5. கிமீ. தொலைவுக்கு தொடர் போராட்டம்.. ஸ்தம்பித்தது ஜிஎஸ்டி சாலை
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற தொடர் போராட்டங்களால் கிண்டி- பல்லாவரம் இடையே போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Recommended Video

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலையை ஸ்தம்பிக்க வைத்த தமிழ் உணர்வாளர்கள் இன்று மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிஎஸ்டி சாலையை ஸ்தம்பிக்க செய்தனர். தொடர்போராட்டங்களினால் கிண்டி முதல் பல்லாவரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கை. கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
தமிழக மக்களின் உணர்வுகளை அவமானப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

சென்னையில் மோடி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.480 கோடி செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

மோடிக்கு கறுப்பு கொடி
சென்னை விமான நிலையம் வந்த பிரமர் மோடிக்கு திமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும் கொடி கம்பங்கள், கருப்பு பலூன்கள் வானில் பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது
மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாபேட்டை, கிண்டி, ஆலந்தூர், விமானநிலையம் வரை போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர் போராட்டங்களால் கிண்டி- பல்லாவரம் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடும் எதிர்ப்பு
காவிரி வாரியம் அமைக்காத பிரதமர் மோடி சென்னை வந்துள்ளதை கண்டித்து அதிமுக, தேமுதிக என சில கட்சிகள் தவிர ஒட்டுமொத்த எதிர்கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன்பு அண்ணாசாலையில் கிரிக்கெட்டுக்கு எதிராக புரட்சி செய்ததை போல இன்று மோடிக்கு எதிராக ஜிஎஸ்டிசாலையில் புரட்சியில் ஈடுபட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications