மாபெரும் ஐடி ரெய்டு... சசிகலா குடும்பத்தின் அத்தனை சொத்துகளையும் அடியோடு முடக்க முயற்சி?
மிகப் பெரிய ஐடி ரெய்டு மூலம் சசிகலா குடும்பத்தின் அத்தனை சொத்துகளையும் அடியோடு முடக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது.
சென்னை: தமிழக அரசியலில் ஜெயலலிதாவை பயன்படுத்தி 30 ஆண்டுகாலம் சசிகலா குடும்பம் குவித்த அத்தனை சொத்துகளையும் இன்றோடு முடக்கி வைக்கும் முயற்சியாகத்தான் மாபெரும் ரெய்டு நடத்தப்படுகிறதாகவே கருதப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்றி அரசியல் சக்தியாக உருவெடுக்க சசிகலா குடும்பம் முயற்சித்தது. கடந்த ஓராண்டாக சசிகலா குடும்பம் பகீரத பிரயத்தனம் செய்தும் அவர்களது இலக்கை எட்டவிடாமல் டெல்லி தடுத்து நிறுத்துகிறது.

சசிகலாவுக்கு பெங்களூரு
இப்போது நடைபெறும் வருமான வரி சோதனையெல்லாம் முன்னரே நடைபெறும் என்றும் கூறப்பட்டது. சசிகலா சிறைக்குப் போன நிலையில் தினகரன் தலையெடுத்தார். ஆனால் அவரையும் டெல்லி நிராகரித்துவிட்டது. இதனால் திஹார் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிட்டது.

ஈபிஎஸ் ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை நேற்று முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் என்பது ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்குத்தான் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அத்தனை சொத்தும் அம்போ
அதிமுகவையும் இரட்டை இலையையும் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கும் கையோடு சசிகலா குடும்பத்தையே முடக்கும் வகையில்தான் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 30 ஆண்டுகாலம் சசிகலா குடும்பம் அரசியலின் பெயரில் வாங்கி குவித்த அத்தனை சொத்துகளையும் ஒரே நாளில் முடக்கி ஒட்டுமொத்தமாக அக்குடும்பத்தை செயலிழக்கச் செய்வதுதான் டெல்லியில் அஜெண்டாவாக இருக்கிறது.

முதல் முறையாக..
அதனால்தான் நாடு முழுவதும் 190 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இதற்கு முன்னர் இப்படி ஒரு இமாலய ரெய்டும் நடந்தது. ஒரு குடும்பத்தின் அத்தனை உறவினர்களும் குறிவைத்து முடக்கப்பட்டதும் இல்லை. அனேகமாக இன்றோடு சசிகலா குடும்பத்தின் அத்தனை சொத்துகளையும் டெல்லி முடக்கி வைத்து அவர்களது சகாப்தத்தையே முடிவுக்கும் கொண்டு வரலாம்.












Click it and Unblock the Notifications