பழைய 500 ரூபாய் நோட்டை மாற்ற மறுக்கும் அஞ்சலகங்கள்.. வங்கிக்கே திரும்பச் செல்லும் பொதுமக்கள்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு செல்லும் பொதுமக்களை அஞ்சலகங்கள் அலைகழித்து வருகின்றன.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அஞ்சலகம் செல்லும் பொதுமக்களுக்கு முறையாக பணத்தை மாற்றிக் கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் அஞ்சலகங்கள் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. இதனால் மக்கள் கையில் பணம் இருந்தும் இல்லாத நிலை ஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், நேற்றில் இருந்து வங்கிகள், அஞ்சலகங்களில் செல்லாத ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து புதிய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து, வங்கிகள் அல்லாமல் அஞ்சலகங்களிலும் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியதால் அஞ்சலகங்களுக்கும் சென்று தங்களுக்கான பணத்தை பொதுமக்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பல அஞ்சலகங்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மறுத்து வருகிறது. இதனால் அஞ்சலகம் சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் கூட்டம் அலைமோதும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து துரை என்பவர், "காலையில் இருந்து பணத்தை மாற்ற அஞ்சலகத்தில் காத்திருக்கிறேன்; அஞ்சலகத்தில் பணத்தை மாற்றித் தர மறுக்கிறார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வந்தால் மாற்றித் தருகிறோம் என்று கூறுகிறார்கள். எனக்கு உடனடியாக பணம் தேவை என்பதால் அங்கிருந்து வங்கிக்கு சென்றேன். அங்கு வேகமாக பழைய ரூபாய் நோட்டை மாற்றி புதிய ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.