புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது காற்றழுத்த தாழ்வு! மழை தொடர வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் நிலைகொண்டுள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் கரையை கடக்கலாம் என தெரிகிறது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும், நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அதையடுத்து புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால், இன்றைய நிலவரத்தை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது, அது புயலாக மாறாது என்று தெரியவந்தது.
காற்றழுத்த தாழ்வு மையமாகவே, அது இன்று பகல் 12 மணி முதல் 2.30 மணிக்குள் கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது.
அந்த காற்றழுத்த தாழ்வு மையம், சென்னை-புதுவைக்கு நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து கடலோர பகுதிகளில் இருந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி, சமூக கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆனால் காற்றழுத்தம் எங்கும் நகரமால், புதுச்சேரியில் இருந்து 40 கி.மீ தொலைவில் தொடர்ந்து மையம் கொண்டுள்ளதாக இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தின் வடக்கு மற்றும் வடகடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று ரமணன் கூறியுள்ளார்.
காற்றழுத்த தாழ்வு மையம் கரையை கடந்த பிறகு, அது அரபிக்கடலை நோக்கி பயணிக்கும். அப்போது வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். அநேகமாக இன்று இரவு இது கரையை கடக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications