மும்பையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிய தஷ்வந்த்... மடக்கி பிடித்த போலீஸ்
மும்பை விமான நிலையத்தில் ஏமாற்றிவிட்டு தப்பியோடிய தஷ்வந்தை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Recommended Video
மும்பை: ஹாசினி கொலையாளி தஷ்வந்த், தனது தாயை கொன்று விட்டு தலைமறைவான வழக்கில் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை தனிப்படை போலீசார் மீண்டும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார். கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருந்தது. மகன் தஷ்வந்தும் தலைமறைவாகியிருந்தார்.
தஷ்வந்த் உல்லாச வாழ்க்கை
தஷ்வந்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தது.
தஷ்வந்தை பிடிக்க மாங்காடு போலீசார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவரது நண்பர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மும்பையில் தஷ்வந்த் கைது
செல்போன் டவரை போலீஸார் ஆய்வு செய்தபோது வேறொரு சிம் கார்டு மூலம் அதே செல்போனிலிருந்து சென்னைக்கு போன் பேசியதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த டவரை வைத்தும், முதலில் மும்பைக்கு தஷ்வந்த் பேசிய பெண்ணின் எண்ணை கண்காணித்தும் வந்ததில் தஷ்வந்த் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் நேற்று தஷ்வந்தை கைது செய்தனர்.
விமான நிலையத்தில் தஷ்வந்த்
தஷ்வந்தை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் போட்டு அழைத்துச் செல்லும்படி மும்பை போலீசார் கூறியதன் அடிப்படையில் நேற்று காலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சென்னை காவல்துறையினர், சனிக்கிழமை புழல் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்தனர்.
தஷ்வந்த் தப்பியோட்டம்
மும்பை விமான நிலையத்துக்கு தஷ்வந்தை அழைத்து வந்தனர். இரவு 10.30 மணிக்கு விமானம் என்பதால் சற்று முன்னரே விமான நிலையத்துக்கு காவல்துறையினர் வந்தனர். விமான நிலையத்திற்கு வந்த அவர் கழிவறைக்கு செல்வதாக கூறிய தஷ்வந்த், காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு தப்பினார்.
மும்பை போலீசுடன் தேடுதல் வேட்டை
தஷ்வந்தை பல இடங்களிலும் தேடிய காவல்துறையினர் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சென்னையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தஷ்வந்தை தேடி பிடிக்கும் முயற்சியில் சென்னை போலீஸாரோடு மும்பை போலீஸாரும் ஈடுபட்டனர்.
கூடுதல் தனிப்படை விரைவு
தப்பியோடிய தஷ்வந்தை உயிருடன் பிடிக்க சென்னையில் இருந்து மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான கூடுதல் தனிப்படை மும்பை விரைந்தது. மும்பையில் தஷ்வந்தை கைது செய்த குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான தனிப்படை, மும்பை காவல்துறை உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.
தஷ்வந்த் மீண்டும் கைது
இதனிடையே போலீசை ஏமாற்றி விட்டு தப்பியோடிய தஷ்வந்தை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். மும்பை போலீசாரும், சென்னை போலீசாரும் இணைந்து கைது செய்துள்ளனர். இன்று இரவே தஷ்வந்த் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார். நாளை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்த உள்ளனர்.