ராமஜெயம் கொலையான தினத்தில் திருச்சியில் தங்கியிருந்த தாதா அப்பு- சிபிசிஐடி புதிய ட்விஸ்ட்
திருச்சி: ராமஜெயம் கொலை சம்பவத்தின்போது, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு குற்றவாளியான பிரபல தாதா அப்பு திருச்சியில் தங்கியிருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது.
கடந்த இரண்டரை வருடத்திற்கும் மேலாக இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனாலும் ஒரு துரும்பைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது கணவர் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் மனைவி லதா, கடந்த ஆண்டு டிசம்பரில் மனு தாக்கல் செய்தார். குற்றவாளியை கண்டுபிடிக்க தொடர்ந்து காலஅவகாசம் கேட்டதால் குட்டு வைத்த நீதிமன்றம், ஜூலை 24ம் தேதிவரை சிபிசிஐடி போலீசாருக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.
ஜூலை 24 வரை கெடு
கெடு முடிய இன்னும் பத்து தினங்களே உள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி பல தகவல்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொலை நடந்த தினத்தன்று ராமஜெயம் தனது வீட்டில் இருந்து வாக்கிங் செல்வதற்காக புறப்பட்டு சென்றபோது, அவருக்கு நன்கு தெரிந்த நபர்களால் கடத்தி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தெரிந்த நபர்கள்தான்
தில்லைநகர் வீட்டில் இருந்து சாலை ரோடு வழியாக தனது அலுவலகம் அமைந்திருந்த கோட்டை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ராமஜெயம் நடந்து சென்றிருக்கவேண்டும் என்றும், அப்போது, அவருக்கு நன்கு தெரிந்த நபருடன் வாகனத்தில் ஏறிச் சென்று இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
தாதா அப்புவுக்கு தொடர்பு?
இதன் அடிப்படையில் விசாரித்தபோது, முக்கிய திருப்பமாக காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு குற்றவாளியான தாதா அப்பு அந்த சமயத்தில் திருச்சியில் தங்கியிருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது.
திருச்சியில் தங்கியிருந்த அப்பு
தாதா அப்பு, கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி வரை திருச்சியில் தங்கியிருந்துள்ளார். தாதா அப்பு திருச்சி வந்தது ஏன்? அவர் எங்கு தங்கியிருந்தார்? என பல்வேறு கேள்விகளுடன் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அப்புவை கைது செய்ய முடியுமா?
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளில், தாதா அப்பு திருச்சியில் தங்கியிருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்துள்ள தகவல்கள் ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
10 தினங்கள் மட்டுமே
குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க நீதிமன்றம் கொடுத்துள்ள கெடு முடிய இன்னும் 10 தினங்கள் மட்டுமே உள்ளது. ஒருவேளை ராமஜெயம் கொலை வழக்கில் அப்புவுக்கு தொடர்பு இருந்தாலும் அவரை கைது செய்ய முடியாது ஏனெனில் கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா சிறையில் அப்பு உயிரிழந்து விட்டார். இதை சொல்லி ஒருவேளை கேஸை முடிச்சிருவாங்களோ?